5 ஆம் திகதிக்கு பிறகு நானே அமைச்சர் – அரவிந்தகுமார் சூளுரை

” எதிர்வரும் 5ஆம்  திகதி நடைபெறவுள்ள தேர்தலில்,  ஐக்கிய மக்கள் சக்தி அமோகமாக வெற்றியடைந்து பலம் பொருந்திய ஆட்சியை அமைப்பதுடன், பதுளை மாவட்டத்தில் நானும், தம்பி வடிவேல் சுரேசும் பாரிய வெற்றியையும் ஈட்டுவோம். அவ் வெற்றியின் அடிப்படையில், நான் அமைச்சு பதவியைப் பெற்று, அப்பதவியுடனேயே மீண்டும் எமது மக்களை சந்திப்பேன்.”

இவ்வாறு பதுளை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அ. அரவிந்தகுமார் குறிப்பிட்டார்.

ஹப்புத்தளைப் பகுதியின்இ சர்வட்டி குறிஞ்சி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மூன்றலில்  (இன்று) 16.07.2020ல் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ கடந்த நான்கு வருடங்களில் நான் எமது மக்களுக்கு ஆற்றிய சேவைகளை 24 பக்கங்களைக் கொண்ட விபரக்கொத்தினை பத்திரிகை வடிவில் தயாரித்து, எமது மக்களிடம் சமர்ப்பித்திருக்கின்றேன்.  அந்த நான்கு வருடங்களில் எனக்கு அரசினால் கிடைக்கப்பெற்ற நான்கு கோடி ரூபா நிதி உள்ளிட்ட எனது முயற்சிகளினால் பெறப்பட்ட கோடிக்கணக்கான ரூபா நிதியுடன், பல கோடி ரூபா நிதியில் எமது மக்களுக்கு சேவையாற்றியுள்ளேன்.
அச் சேவைகளின் தொகுப்பினை மக்களிடம் வழங்கியுள்ளேன். அதனை எமது மக்கள் பார்வையிட்டுக் கொள்ள முடியும்.  அந்நிலையில் கடந்த நான்கு வருடங்களாக நான் ஆற்றிய மக்கள் சேவைகள் குறித்த தொகுப்பினைப் பார்த்த எமது மக்கள் வியப்பும் பிரமிப்பும் அடைந்துள்ளனர். அதனை எமது மக்களே நேரடியாக என்னிடம் கூறி வருகின்றனர்.
மக்கள் எனக்கு வழங்கிய ஆணைக்கமைய பாரிய சேவைகளையாற்றிவிட்டே மீண்டும் ஆணையைப் பெற மக்களிடம் வந்துள்ளேன். எனது சேவைகளை விட்ட இடத்திலிருந்து ஆரம்பிப்பேன். இதற்காகவே எமது மக்களிடம் மீளவும் வந்திருக்கின்றேன்.
ஆகவே,  எமது மக்கள் தொழிற்சங்க, அரசியல் பேதங்களுக்கப்பால்,  சமூக ரீதியில் ஒன்றிணைந்து  எனது வெற்றியை உறுதிப்படுத்துவார்களென்ற பாரிய நம்பிக்கை எனக்குண்டு.
என்னை பொறுத்தவரையில் எனது மனசாட்சிக்கு விரோதமாக நான் எதனையும் செய்யவில்லை. சுயநலம் மற்றும் தன்னலம் என்பது என்னிடம் கிடையாது. எனது குடும்ப நலன்கள் குறித்து சிந்தித்ததும் கிடையாது. 24 மணித்தியாலயங்களும் மக்களைப் பற்றிய சிந்தனையுடனேயே, நான் இருந்து வருகின்றேன். தொடர்ந்தும் அவ்வாறே இருப்பதற்கு கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றேன்.
இத்தேர்தல் முக்கியமானதொரு தேர்தலாகும். எமது சமூகத்திற்கான அரசியல் பிரதிநிதித்துவங்கள் அவசியமாகும். எமது பிரதிநிதித்துவங்கள் மக்கள் மன்றங்களில் இல்லாது போனால், நாம் அரசியல் அனாதைகளாகிவிடுவோம். ஆகவே எமது மக்கள் கிரமமாகவும், முறையாகவும் நடந்து கொள்ளல் வேண்டும்.” – என்றார்.
எம். செல்வராஜா, பதுளை.

Related Articles

Latest Articles