7,500 மில்லியன் ரூபா நிலுவையில் – வெளியான பகீர் தகவல்

நாடளாவிய ரீதியிலுள்ள நீர் பாவனையாளர்கள் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு 7500 மில்லியன் ரூபா கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

வர்த்தக நிறுவனங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் உள்ளிட்டவைகளே மேற்படி கட்டணத்தை செலுத்துவதிலிருந்து தவறியுள்ளதாக ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றுள்ள விசேட பேச்சுவார்த்தையின் போது மேற்படி சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

நீர்வழங்கல் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதன்போது நிர்மாணப் பணிகள் நிறைவடையும் நிலையிலுள்ள சிறிய மற்றும் பாரிய குடிநீர்த் திட்டங்களை விரைவில் நிறைவு செய்து மக்களின் பயன்பாட்டுக்கு கையளிக்குமாறு ஜனாதிபதி குறித்த அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் குடிநீர் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார். அதற்கிணங்க உள்நாட்டு மற்றும் சர்வதேச நிதியின் கீழ் தற்போது 2337 பாரிய, சிறு மற்றும் நடுத்தர அளவிலான குடிநீர்த் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் அத்திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் இதன்போது தெளிவுபடுத்தியுள்ளனர்.

2019ஆம் ஆண்டு முதல் இன்றுவரை 467,808 புதிய நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதோடு 2025ஆம் ஆண்டுக்கிடையில் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 5,946,352 இலக்காக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படும் நிலையில் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக தேசிய சமுதாய குடிநீர் வழங்கல் திணைக்களத்தின் மூலம் கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது முன்மொழியப்பட்ட 84 திட்டங்கள் உட்பட 704 புதிய கிராமம் சார் சமுதாய குடிநீர்த் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மற்றும் நீர்வளச் சபை சட்டத்தை திருத்துவது மற்றும் தேசிய பொது நீர் வழங்கல் திணைக்களச் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. வர்த்தக நோக்கில் செயற்படும் பெரிய அளவிலான குழாய் கிணறுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும் குழாய் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மற்றும் விவசாய கிணறுகளை முழுமையாக கணக்கெடுக்கவும் பாரியளவிலான நிலங்களை துண்டாக்கும்போது நிலத்தடி நீரை பாதுகாப்பதற்கு அவசியமான திட்டங்களை தயாரிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

2022 ஏப்ரல் மாதம் வரை வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் உட்பட பாவனையாளர்கள் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு செலுத்த வேண்டிய தொகை சுமார் 7,500 மில்லியன் ரூபாவாகுமென இதன்போது அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles