லிந்துலையில் 10 வயது சிறுவனை கொடுமைப்படுத்திய சித்திக்கு மறியல்!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தமிழ் பாடசாலையொன்றில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவரை கடுமையாக தாக்கி கொடுமைப்படுத்தினார் எனக் கூறப்படும் அம் மாணவனின் சித்தியை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரபுதிகா லங்காகனி இன்று சனிக்கிழமை (24) உத்தரவு பிறப்பித்தார்.

குறித்த மாணவனை பராமரித்து வந்த சித்தி அம்மாணவனை கடித்தும் , தலையில் பலமாக கொட்டியும் உடம்பில் சரமாரியாக தாக்கியும் கடந்த சில தினங்களாக கொடுமைப்படுத்தியுள்ளார்.

இதனால் மாணவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் கல்வியிலும் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை. மாணவன் வலியால் அவதிப்பட்ட நிலையை அறிந்த ஆசிரியை மாணவனிடம் அது பற்றி விசாரித்துள்ளார்.

இதையடுத்து மாணவன் தனக்கு வீட்டில் நேர்ந்த விடயங்களை தெரிவிக்க இது தொடர்பாக ஆசிரியை அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்த பின் மாணவனின் நிலைமையை அறிந்து பாடசாலை அதிபர் லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துளளார்.

இதையடுத்து விசாரணையை ஆரம்பித்த லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாணவனை கொடுமை படுத்திய மாணவனின் தாயின் தங்கை உறவான மாணவனின் சித்தியை (23) வெள்ளிக்கிழமை மாலை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை செய்துள்ளனர்.

இந்த நிலையில் விசாரணை செய்தபோது வெளியான உண்மையின் அடிப்படையில் மாணவனின் சித்தியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மாணவனின் சித்தி ஒரு பிள்ளையின் தாய் மற்றுமின்றி ஐந்து மாத கர்பிணியும் ஆவார்.

அதேநேரம் மாணவனின் தாய் பண்டாரவளை பகுதியை சேர்த்தவர் . இவர் குடும்ப கஸ்டம் காரணமாக தனது மகனை லிந்துலை வலகா தோட்டத்தில் உள்ள தனது தங்கையிடம் பராமரிக்க விட்டு கொழும்புக்கு தொழிலுக்காக சென்றுள்ளார்.

இந்த நிலையில் தான் பராமரிப்பதாக மாணவனை ஏற்றுக்கொண்ட சித்தி நாகசேணையில் உள்ள தமிழ் பாடசாலையில் பதிவு செய்து கல்வி கற்று வரும் நிலையில் இவ்வாறாக தாக்குதலை மாணவன் மீது மேற்கொண்டுள்ளார் என விசாரணையில் உண்மை வெளியாகியுள்ளது.

அதேநேரம் சித்தியின் கொடுமையாலும் தாக்குதல் காரணமாகவும் காயங்களுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட மாணவனை பொலிஸார் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதித்து பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மாணவனை கொடுமைபடுத்தி தாக்கிய சித்தியை கைது செய்த பொலிஸார் (24) மதியம் நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது சந்தேக நபரை எதிர்வரும் செவ்வாய் கிழமை (27) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அத்துடன் சந்தேக நபரை மனநோயாளர் பரிசோதணைக்கு உட்படுத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்பிக்கும்படியும் நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

கௌசல்யா

Related Articles

Latest Articles