யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட விகாரையை இடிக்க மக்கள் ஒன்று சேர வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரைக் குறிப்பிட்டு பரப்பப்பட்ட துண்டுப்பிரசுரம் தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்குப் பிணை வழங்கப்பட்டது.
தையிட்டி திஸ்ஸ விகாரையை இடித்து அகற்ற சமூக ஊடகங்களில் துண்டுப்பிரசுரத்தைப் பரப்பினார்என்ற குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தால் அழைப்புக் கட்டளை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில்
ஆஜரான நாடாளுமன்ற உறுப்பினரை ஓர் இலட்சம் ரூபா சொந்தப் பிணையில் விடுவித்த நீதிவான் வழக்கை ஜூன் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சார்பில் சட்டத்தரணி மகிந்தன் நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
தையிட்டியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட விகாரையை இடிக்க மக்கள் ஒன்று சேர வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரைக் குறிப்பிட்டு பரப்பப்பட்ட துண்டுப்பிரசுரம் தொடர்பாக பலாலி பொலிஸார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது குற்றஞ்சாட்டி வழக்குப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த துண்டுப்பிரசுரம் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட நிலையில் அது போலியானது எனத் தெரிவித்து ஊடகச் சந்திப்பொன்றில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெளிவுபடுத்தியதுடன் தனது சமூக வலைத்தளங்களிலும் போலிச் செய்தி எனக் குறிப்பிட்டு பகிர்ந்திருந்தார்.
