ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தலைவர் பதவி அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும், அவருக்கு அப்பதவி வழங்கப்படவில்லை என தெரியவருகின்றது.
மாறாக கட்சி தலைவரான சஜித் பிரேமதாச, கொழும்பு மாவட்ட தலைவர் பதவியையும் தன்வசம் வைத்திருக்க முடிவு செய்துள்ளார் என அறியமுடிகின்றது.
கொழும்பு மாவட்ட தலைவர் பதவி தனக்கு வழங்கப்படவில்லை என்பதை ஹர்ஷ டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.
‘ கொழும்பு மாவட்டத்திலிருந்து நான்கு தடவைகள் நாடாளுமன்றம் தெரிவாகியுள்ளேன். எனவே, பதவிகளை கேட்டுப்பெறவேண்டியதில்லை. மக்கள் என் பக்கம் உள்ளனர்.” என்று ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் குருணாகலை மாவட்ட தலைவராக நளின் பண்டாரவும், புத்தளம் மாவட்ட தலைவராக ஹெக்டர் அப்புஹாமியும், திருகோணமலை மாவட்ட தலைவராக இம்ரான் மஹ்ரூப்பும், மொனறாகலை மாவட்ட தலைவராக ரஞ்சித் மத்தும பண்டாரவும், களுத்து மாவட்ட தலைவராக அஜித் பி பெரேராவும், காலி மாவட்ட தலைவராக கயந்த கருணாதிலக்கவும் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
