மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராய்வதற்கு விரைவில் கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
” மாகாணசபைத் தேர்தல் பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. அதனை நடத்தும் விதம் பற்றி நீண்டகாலம் விவாதம் நடைபெற்றுவருகின்றது. எனவே, கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்தி, அதன்போது எட்டப்படும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் மீண்டுமொரு அமைச்சரவை பத்திரத்தை முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அதன்பின்னர் அந்த யோசனை குறித்த ஆராயப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப்படும். எனினும், நல்லாட்சிபோல் தேர்தலை ஒத்திவைக்கும் திட்டம் எமது அரசாங்கத்துக்கு கிடையாது. மக்களின் நன்மைகளுக்காகவே மூன்றிலிரண்டு பெரும்பான்மைபலம் பயன்படுத்தப்படும்.” – என்றும் அமைச்சர் தெரிவித்தார்.










