இந்தியா- நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி தொடரை கைப்பற்றும்.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
அந்த ஆட்டத்தில் 301 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 6 பந்துகளை மீதம் வைத்து வெற்றியை வசப்படுத்தியிருந்தது. இதனால் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது.
முதல் போட்டியில் விராட் கோஹ்லி 93 ரன்களையும், கேப்டன் ஷுப்மன் கில் 56, ஸ்ரேயஸ் ஐயர் 49, கே.எல்.ராகுல் 29, ஹர்ஷித் ராணா 29 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த திறன் வெளிப்படக்கூடும். கடந்த ஆட்டத்தில் காயம் அடைந்த வாஷிங்டன் சுந்தர் விலகி உள்ளார். அவருக்கு மாற்றாக ஆயுஷ் பதோனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எனினும் அவருக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான். அநேகமாக வாஷிங்டன் சுந்தர் இடத்தில் நிதிஷ் குமார் களமிறங்கக்கூடும். முதல் போட்டியில் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த ரோஹித் சர்மா பெரிய அளவிலான இன்னிங்ஸை விளையாடுவதில் முனைப்பு காட்டக்கூடும்.
நியூஸிலாந்து அணி இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும். இதனால் அந்த அணி கூடுதல் கவனத்துடன் செயல்பட முயற்சிக்கக்கூடும்.
