வடக்கு மாகாண அபிவிருத்தியில் அநுர அரசாங்கம் அதிக அக்கறை: கனேடியத் தூதுவரிடம் ஆளுநர் சுட்டிக்காட்டு

வடக்கு மாகாண அபிவிருத்தியில் அநுர அரசாங்கம் அதிக அக்கறை: கனேடியத் தூதுவரிடம் ஆளுநர் சுட்டிக்காட்டு

“போர் முடிவுற்ற கடந்த 16 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த அரசுகளை விட, தற்போதைய அரசு வடக்கு மாகாணம் தொடர்பில் கூடுதல் கரிசனையுடனும், அக்கறையுடனும் செயற்படுகின்றது.

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் தொடர்பில் இவ்வாறானதொரு அக்கறை இதுவரை காண்பிக்கப்படவில்லை.”

– இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினுக்கும் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“வடக்கு மாகாணப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளே காணப்படுகின்றன. ஆனால், இங்கிருந்து இவை மூலப்பொருட்களாகவே வெளியே கொண்டு செல்லப்படுகின்றன. இவற்றை வடக்கிலேயே பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதற்கான தொழிற்சாலைகள் எம்மிடம் இல்லை. இத்துறையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும்.

இந்தியாவுடனான விமானச் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளமையால் வடக்குக்கு வரும் சுற்றுலாவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பலாலியிலுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் வசதிகள் மேலும் மேம்படுத்தப்பட்ட பின்னர், நிச்சயமாக அதிகளவான சுற்றுலாவிகள் வருகை தருவார்கள். இதன் ஊடாக வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை பாரிய வளர்ச்சியடையும்.

முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிடுவதற்குச் சாதகமான சூழல் தற்போது உருவாகியுள்ளது. அரசால் வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்குவதற்கான அடிக்கல் நடப்பட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு’ முதலீட்டாளர்கள் மத்தியில் மிகச் சாதகமான சமிக்ஞையை ஏற்படுத்தியுள்ளது.” – எனவும் வடக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண சபை இயங்கிய காலத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும், கனடாவின் ரொரன்டோ மாநகரத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட நட்புணர்வு ஒப்பந்தம் தொடர்பில் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

அந்த ஒப்பந்தத்தின் கீழான செயற்பாடுகளை மீளவும் வலுப்படுத்துவது தொடர்பில் கரிசனை செலுத்துமாறும் அவர் உயர்ஸ்தானிகரிடம் கேட்டுக்கொண்டார்.

இச்சந்திப்பின் போது, கடந்த காலத்தில் மீள்குடியேறிய மக்களுக்கான உதவிகளை வழங்கியமைக்கு கனேடிய அரசுக்கு ஆளுநர் நன்றிகளைத் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், டித்வா பேரிடர் பாதிப்பு மற்றும் அதிலிருந்தான மீள்கட்டுமானப் பணிகள் குறித்தும், வடக்கு மாகாணத்தின் கூட்டுறவுத் துறையின் வளர்ச்சி குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.

வடக்கு மாகாணத்தின் அடிப்படைப் புள்ளிவிவரங்கள், முதலீட்டு வாய்ப்புகள், மாகாண அமைச்சுகளின் செயற்பாடுகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் மாகாண அதிகாரிகளால் உயர்ஸ்தானிகருக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

இச்சந்திப்பில் ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள், மாகாண சபை அதிகாரிகள் மற்றும் கனேடியத் தூதரக அரசியல் விவகாரச் செயலர் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles