நாட்டில் பல்லினக் கட்சி முறையிலான ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக, சிதறிக்கிடக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று கொழும்பில் நடைபெற்றது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், பல முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு எதிர்காலக் கூட்டுப் பொறிமுறை குறித்து ஆராய்ந்தனர்.
தற்போதைய அரசின் பலமான ஆதிக்கத்திற்கு மத்தியில், பலவீனமடைந்துள்ள எதிர்க்கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, ஜனநாயக ரீதியிலான சமநிலையை உருவாக்குவதே இச்சந்திப்பின் பிரதான நோக்கமாகும்.
நாட்டில் பலமான எதிர்க்கட்சி ஒன்று இயங்க வேண்டும் என்றும், அதற்காக அனைத்துத் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும் என்றும் மகாநாயக்க தேரர்கள் வழங்கிய ஆலோசனையைத் தொடர்ந்தே இந்த நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்தப் புதிய கூட்டணி முயற்சிகளின் ஒரு கட்டமாக, ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாமல் ராஜபக்ஷ ஆகியோருடன் ஆரம்பகட்டப் பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளன.
இன்றைய சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா,
“இலங்கையின் பல்லினக் கட்சி முறையை அழிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. கொள்கை ரீதியாக மாறுபட்டிருந்தாலும், ஜனநாயகத்தைப் பாதுகாக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.” – என்றார்.
இந்தக் கலந்துரையாடலில் முன்னாள் அமைச்சர்களான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், உதய கம்மன்பில, மஹிந்த அமரவீர, மஹிந்த அமரவீர, சாகல ரத்நாயக்க, தலதா அத்துகோரள, வஜிர அபேவர்தன உள்ளிட்ட சிரேஷ்ட அரசியல்வாதிகள் பலரும் பங்கேற்றனர்.
தற்போதைய அரசியல் சூழலில், அரசுக்கு நிகரான ஒரு பலமான மாற்று சக்தியாகத் திகழ இந்த ‘எதிர்க்கட்சிகளின் கூட்டு’ அமையும் என்று சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர்கள் நம்பிக்கை வெளியிட்டனர்.










