இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை வியாழக்கிழமை ஜேர்மனிக்குப் பயணம் செய்யவுள்ளார்.
ஜேர்மன் – ஆசிய பசிபிக் வணிக சங்கம் மற்றும் அதன் பிரெமன் அத்தியாயம் விடுத்த விசேட அழைப்பின் பேரில் இந்த விஜயம் அமையவுள்ளது.
ஆசிய பசிபிக் வணிக சங்கத்தின் பிரெமன் அத்தியாயத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவில், ஆசியப் பிராந்தியத்தின் சார்பில் கௌரவ விருந்தினராகவும், முதன்மைப் பேச்சாளராகவும் அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்கவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஜேர்மனிய அரசின் உயர்மட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து அவர் கலந்துரையாடவுள்ளார். குறிப்பாக, வர்த்தக மேம்பாடு மற்றும் இலங்கையர்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு வசதிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக இச்சந்திப்புகளில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.
இலங்கையில் தற்போதுள்ள பொருளாதாரச் சூழல் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஜேர்மனிய வர்த்தகச் சமூகத்தினருக்கு விளக்கும் வகையில் பல தொடர் கூட்டங்களிலும் அவர் பங்கேற்கவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










