காலங்கள் உருண்டோடி ஒரு வருடம் கடந்தாலும், அந்த கறுப்பு தினத்தின் வடுக்கள் இன்னும் கெரண்டியெல்ல மக்களின் மனங்களிலிருந்து மறையவில்லை.
கடந்த ஆண்டு மே மாதம் 11-ஆம் திகதி கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட கெரண்டியெல்ல பகுதியில் நிகழ்ந்த அந்த கோர பஸ் விபத்து, பல குடும்பங்களின் வாழ்வை ஒரே கணத்தில் இருளாக்கியது.
சுமார் 300 அடி பள்ளத்தில் பஸ் வீழ்ந்து நொறுங்கிய அந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே 23 பேர் உயிரிழந்தனர். சிகிச்சைப் பலனின்றி மேலும் 5 பேர் உயிரிழக்க, மொத்தமாக 28 உயிர்கள் பறிபோயின.
இந்தத் துயரச் சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று விபத்து நடந்த அதே இடத்தில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.
கொத்மலை பொலிஸ் அதிகாரி இந்திக்க லலித் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிழ்வில், பிரதேச சபை செயலாளர், மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தியும் மௌன அஞ்சலி செலுத்தியும் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்தனர்.
அந்த விபத்து நடந்த போது, ரப்பொட கம மற்றும் கொரண்டியல்ல பகுதி மக்கள் காட்டிய மனிதநேயம் இன்றும் போற்றத்தக்கது. செங்குத்தான பள்ளத்தில் இறங்கி, தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது காயமடைந்தவர்களை மீட்டெடுத்த அந்த மக்களின் மனிதாபிமானம், இருண்ட காலத்தின் ஒளிக்கீற்றாக அமைந்தது.
ஆனால், கொத்மலையின் துயரம் இதோடு முடிந்துவிடவில்லை. அண்மையில் வீசிய ‘டித்துவா’ (Dithuva) சூறாவளியின் கோரத்தாண்டவம் இப்பகுதியை மீண்டும் நிலைகுலையச் செய்தது. மண்சரிவு காரணமாக 70-க்கும் மேற்பட்ட உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. சிரிப்பொலிகள் நிறைந்திருந்த இந்த மண், இன்று தொடர் மரணங்களால் மௌனமான ஒரு மயானமாக உருவெடுத்துள்ளது.
ஒவ்வொரு காற்று வீசும் போதும், அங்கு இழந்த உயிர்களின் கதைகள் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன. விபத்திலும் இயற்கைச் சீற்றத்திலும் உயிரிழந்த அனைவருக்கும் எமது ஆழ்ந்த அஞ்சலிகள். உறவுகளை இழந்து வாடும் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை என்றாலும், அவர்களின் நினைவுகள் இந்த மண்ணில் என்றும் நிலைத்திருக்கும்.
கௌசல்யா
