“நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி”

 

“சமூக சக்தி” தேசிய திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி மேற்பார்வை

– 13,977 சமூக அபிவிருத்தி சபைகள் நிறுவப்பட்டுள்ளன

– நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி

“சமூக சக்தி” வறுமை ஒழிப்பு தேசிய திட்டத்திற்காக 2026 வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 25,000 மில்லியன் ரூபாய் நிதியில், இதுவரை 23,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வாழ்வாதார அபிவிருத்தி, உற்பத்திப் பொருளாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய, சமூக அபிவிருத்தி சபைகளினால் முன்னுரிமைப்படுத்தப்பட்ட திட்டங்களுக்காகவே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“சமூக சக்தி” தேசிய திட்டத்தின் இதுவரைக்கால முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தகவல்கள் வெளியிடப்பட்டன.

கிராமப்புற வறுமையை ஒழிப்பது மற்றும் கிராமிய சமூகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாகச் செயற்படுத்தப்படும் “சமூக சக்தி” தேசிய திட்டத்தின் முன்னேற்றத்தை இங்கு ஆராய்ந்த ஜனாதிபதி, இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் இது எந்தளவு பங்களிப்பு செய்கிறது என்பது குறித்து தொடர்ச்சியான மீளாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.

கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் இதுவரை 13,977 சமூக அபிவிருத்தி சபைகள் நிறுவி முடிக்கப்பட்டுள்ளதாக இங்கு சுட்டிக்காட்டிய அதிகாரிகள், அந்தச் சபைகளுக்காக வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.

“சமூக சக்தி” தேசிய திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள சமூக சக்தி பிரிவுகளுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், சமூக அபிவிருத்தி சபை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கப்படும் பயிற்சித் திட்டங்கள் குறித்தும் இதன்போது ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது.

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் உபாலி பன்னிலகே, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார , கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles