பிரபாகரனின் சடலம் எங்கே? இடத்தை கூறினால் நினைவேந்தல் நடத்த சிலர் முற்படலாம்!

” பிரபாகரனின் சடலத்துக்கு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியும். அது பற்றி பகிரங்கமாக கூறமுடியாது. அவ்வாறு கூறினால் அந்த இடத்துக்கு சென்று சிலர் நினைவேந்தல் நடத்தக்கூடும். நினைவகம் அமைக்க முற்படக்கூடும்.”

இவ்வாறு இலங்கையில் இறுதிக்கட்டப்போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே பொன்சேகா மேற்படி பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

“போர் தொடர்பில் நீங்கள் இன்றளவிலும் மனதுக்குள் நீங்கள் இரகசியமொன்றை மறைத்து வைத்துள்ளீர்கள். எனக்குகூட அதை பற்றி குறிப்பிடமாட்டீர்கள்.

சிலவேளை உங்களது மனைவிக்குகூட அது தெரியாமல் இருக்கலாம். வேலுபிள்ளை பிரபாகரனின் சடலத்துக்கு என்ன நடந்தது.” என பொன்சேகாவிடம் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த பொன்சேகா கூறியவை வருமாறு ,

“ பிரபாகரன் போரில் கொல்லப்பட்டுவிட்டார். இது ரகசியம் அல்ல. பிரபாகரன் கொல்லப்பட்டதும் கர்ணாவை விமானத்தில் சம்பவ இடத்துக்கு அனுப்பினோம். சூசை, பொட்டு அம்மானின் மனைவி உட்பட அனைவரது சடலங்களையும் அவர் அடையாளம் கண்டார்.

பொட்டு அம்மானின் மனைவியின் கழுத்தில் மூன்று சைனட்டுகள் இருந்தன. பொட்டு அம்மானுக்கு துப்பாக்கிச்சூடு பட்டதும், அவர் குண்டை வெடிக்கச் செய்து இறந்துவிட்டார் என கேபிகூட குறிப்பிட்டிருந்தார்.

பிரபாகரனின் சடலம் அடையாளம் காணப்பட்டது. பாரிய காயங்கள் இருந்தன. இது பற்றி எனக்கு தெரியப்படுத்தப்பட்டது. புலிகளின் சீருடையில் இருந்தார். சீருடையை அகற்றுமாறு நான் கூறினேன்.

சரணடைந்தவர்களுக்கும் சீருடையில் இருப்பதற்கு நாம் அனுமதிக்கவில்லை.

பிரபாகரனின் சடலத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி நான் ஆலோசனை வழங்கினேன். அது என்னவென்பதை நான் சொல்ல மாட்டேன்.

ஏனெனில் அவ்வாறு சொன்னால் அந்த இடத்துக்கு சென்று சிலர் நினைவேந்தலை நடத்துவதற்கு முற்படக்கூடும்.

அதே பகுதியில் குறிப்பிட்டதொரு இடத்தில் சடலத்துக்கு இறுதியாக செய்யவேண்டியவற்றைச் செய்தோம். இடத்தை ஏன் சொல்ல முடியாது என்றால், சிலர் அங்கு சென்று நினைவகம்கூட அமைக்க முற்படலாம்.” என்றார் பொன்சேகா.

Related Articles

Latest Articles