தங்கக் காலணி விருது வெல்லப்போவது யார்?

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடர், இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ‘தங்கக் காலணி’ (Golden Boot) விருதை வெல்வதற்கான பந்தயம் சூடுபிடித்துள்ளது.

கால்பந்து உலகின் மாபெரும் ஜாம்பவான்களால் வரலாற்று ரீதியாக வெல்லப்பட்ட இந்த புகழ்பெற்ற விருதைக் கைப்பற்ற தற்போது மூன்று முன்னணி வீரர்கள் கடுமையான போட்டியில் ஈடுபட்டுள்ளனர்.

கைலியன் எம்பாப்பே, லியோனல் மெஸ்ஸி மற்றும் எர்லிங் ஹாலாண்ட் ஆகியோர் இந்த விருதுக்கான பந்தயத்தில் ஒருவருக்கொருவர் சளைக்காமல் நேருக்கு நேர் மோதி வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி, அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி 8 கோல்கள் மற்றும் 1 கோல் உதவியுடன் (Assist) பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் கைலியன் எம்பாப்பே (7 கோல்கள், 2 கோல் உதவி) மற்றும் நார்வேயின் எர்லிங் ஹாலாண்ட் (7 கோல்கள், கோல் உதவி இல்லை) ஆகியோர் அவருக்கு மிக நெருக்கமாக அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன் 6 கோல்களுடன் இவர்களுக்குப் பின்னால் உள்ளார்.

சமீபத்திய தங்கக் காலணி
வெற்றியாளர்கள் யார்?

2022 (கத்தார்): பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே 8 கோல்களை அடித்து இவ்விருதை வென்றார். மெஸ்ஸி 7 கோல்களுடன் அதற்கு அடுத்த இடத்தை பிடித்தார்.

2018 (ரஷ்யா): இங்கிலாந்தின் ஹாரி கேன் 6 கோல்களை அடித்து தங்கக் காலணியை வென்றார்.

2014 (பிரேசில்): கொலம்பியா நாட்டின் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் 6 கோல்களை அடித்து இவ்விருதைப் பெற்றார்.

தங்கக் காலணி வெற்றியாளர் எவ்வாறு
தீர்மானிக்கப்படுகிறார்?

தொடரின் இறுதிப் போட்டி முடிவடையும் போது, எந்தவொரு வீரர் அதிக கோல்களை அடித்துள்ளாரோ அவருக்கே இந்த தங்கக் காலணி விருது வழங்கப்படும். இறுதிப் போட்டிக்கு பின்னர் இவ்விழா நடைபெறும்.

அதிக கோல்களை அடித்த பட்டியலில் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடிக்கும் வீரர்களுக்கு ‘வெள்ளிக் காலணி’ (Silver Boot) மற்றும் ‘வெண்கலக் காலணி’ (Bronze Boot) விருதுகள் வழங்கப்படும்.

கோல்களின் எண்ணிக்கை சமமானால் (Tie-breaker)
என்ன நடக்கும்?

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வீரர்கள் சம எண்ணிக்கையிலான கோல்களை அடித்திருந்தால், அவர்கள் சக வீரர்களுக்கு கோல் அடிக்க எத்தனை முறை உதவினார்கள் (Assists) என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். அதிக கோல் உதவிகளைச் செய்த வீரரே விருதை வெல்வார்.

ஒருவேளை, கோல் உதவிகளின் எண்ணிக்கையும் சமமாக இருக்கும் பட்சத்தில், மிகக் குறைந்த நிமிடங்கள் மைதானத்தில் விளையாடி இந்த கோல்களையும், கோல் உதவிகளையும் எட்டிய வீரருக்கு தங்கக் காலணி விருது வழங்கப்படும்.

உலகக் கிண்ண வரலாற்றில் சமநிலை
(Tie) ஏற்பட்டுள்ளதா?

1962 இல்: ஆறு வீரர்கள் சமமான கோல்களுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டனர். அப்போது அந்த விருது அவர்கள் அனைவருக்கும் பொதுவாக வழங்கப்பட்டது.

1994 இல்: இரு வீரர்களுக்கு இடையே சமநிலை ஏற்பட்டதால் விருது பகிர்ந்து கொள்ளப்பட்டது. இதே ஆண்டில்தான், ஒரே ஒரு வெற்றியாளரை மட்டும் தேர்ந்தெடுக்கும் வகையில் ‘டை-பிரேக்கர்’ (Tie-breaker) விதிமுறையை FIFA அறிமுகப்படுத்தியது.

2010 இல் (பிரசித்தி பெற்ற சமநிலை): தோமஸ் முல்லர், டேவிட் வில்லா, வெஸ்லி ஸ்னைடர் மற்றும் டியாகோ பார்லான் ஆகிய நான்கு வீரர்களும் தலா 5 கோல்களுடன் சமநிலை பெற்றனர்.

எனினும், ஜெர்மனி வீரரான தோமஸ் முல்லர் மற்ற வீரர்களை விட கூடுதலாக 2 கோல் உதவிகளை (Assists) செய்திருந்ததால், அவரே அதிகாரப்பூர்வமாக தங்கக் காலணி விருதை வென்றார்.

Related Articles

Latest Articles