பதுளை வேவெஸ்ஸ தோட்டத்தின் மத்தியப் பிரிவில் சுமார் 27 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட இறப்பர் காணியை தனியாருக்கு வழங்குவதற்கு பலாங்கொடை பிளாண்டேஷன்ஸ் பி.எல்.சி. மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படும் நடவடிக்கைக்கு தோட்டத் தொழிலாளர்கள்கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
குறித்த காணி நீண்டகாலமாக இறப்பர் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்டு வருவதுடன், அதனை நம்பியே பல தொழிலாளர் குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வருவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சுமார் 27 ஹெக்டேர் இறப்பர் காணியை தனியார் தரப்புக்கு வழங்குவதன் மூலம் தங்களது வேலைவாய்ப்பும் எதிர்கால வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் எனதொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
“தோட்டக் காணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு முன்னர் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலம் தொடர்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும்” என தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், குறித்த காணி தொடர்பான தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்து, தொழிலாளர்களின் வேலைவாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி: சதாசிவம் சந்ரமோகன்










