இசை மேதை நந்தா மாலினி காலமானார்!

பல தலைமுறைகளின் உணர்வுகளுக்கு குரலாக ஒலித்த, இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் காலமானார்.

நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மறைவை குடும்பத்தினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

1943ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் திகதி பிறந்த நந்தா மாலினி, சிறு வயதிலேயே இசைத்துறையில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இலங்கை வானொலியின் சிறுவர் நிகழ்ச்சிகள் ஊடாக அறிமுகமான அவரது குரல், பின்னர் சிங்கள இசை உலகின் தவிர்க்க முடியாத அடையாளமாக மாறியது.

1962ஆம் ஆண்டு வெளியான இலங்கையின் முதலாவது முழுநீள வண்ணத் திரைப்படமான ‘ரன்முத்து துவ’ திரைப்படத்தில் பின்னணிப் பாடகியாகப் பாடியதன் மூலம் அவர் திரையிசையில் பெரும் கவனம் பெற்றார். அதில் பாடிய ‘Galana Gangaki Jeevithe’ பாடல் அவரது இசைப் பயணத்தின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. பின்னர் முதல் சரசவிய விருது விழாவில் சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான விருதையும் பெற்றார்.

ஆனால் நந்தா மாலினியின் பாடல்கள் வெறும் இசையாக மட்டும் இருக்கவில்லை.

காதல், தாய்மை, வறுமை, மனித வாழ்க்கை, சமூக அநீதி, மக்களின் வேதனை, போராட்டம் என சாதாரண மக்களின் உணர்வுகளை தனது குரலில் வெளிப்படுத்தியவர் அவர். அதனால்தான் அவரது குரல் பல தலைமுறைகளைக் கடந்து இலங்கை மக்களின் வாழ்க்கையுடன் ஒன்றிணைந்தது.

பல தசாப்தங்களாக நீண்ட அவரது இசைப் பயணத்தில் ஏராளமான தேசிய மற்றும் திரைப்பட விருதுகள் அவரைத் தேடி வந்தன. ‘Sathyaye Geethaya’, ‘Pavana’ போன்ற அவரது இசை நிகழ்ச்சிகள் சமூகப் பிரச்சினைகளை இசையின் வழியாகப் பேசும் முக்கிய படைப்புகளாகவும் நினைவுகூரப்படுகின்றன.

82 வயதில் நந்தா மாலினியின் குரல் இன்று மௌனமாகியிருக்கலாம்…

ஆனால் அவர் பாடிய பாடல்களும், அவற்றில் ஒலித்த மக்களின் உணர்வுகளும் இலங்கையின் இசை வரலாற்றில் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

இசை மேதை நந்தா மாலினிக்கு எமது அஞ்சலி!

Related Articles

Latest Articles