ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நகரில் அனுமதிப்பத்திரமின்றி திறக்கப்பட்டிருந்த கடைகளை மூடுமாறு பொலிஸார் இன்று உத்தரவிட்டனர்.
பயணத்தடை அமுலில் இருந்தாலும் உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்வதற்காக கடைகளை திறப்பதற்கு அனுமதி பத்திரம் வழங்கப்பட்டிருந்தது. சில வர்த்தகர்கள் அனுமதி பத்திரமின்றியே கடைகளை திறந்து வைத்துள்ளனர்.இதனால் பெருமளவானவர்கள் நகர் பகுதிக்கு வரும் நிலை காணப்படுகின்றது. வாகனங்களும் அதிகளவு வருகின்றன.
சிலர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காமல் செயற்படுவதையும் காணக்கூடியதாக இருந்தது. எனவேதான், அனுமதி பத்திரம் பெறாத கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அத்தியாவசிய தேவைகள் இன்றி ஹட்டன் நகருக்கு வருகைதந்த முச்சக்கரவண்டி மற்றும் ஏனைய வாகனங்கள் திருப்பியனுப்பப்பட்டன.
எதிர்வரும் தினங்களில் அனுமதிப்பத்திரமின்றி கடைகள் திறக்கப்பட்டால் திறக்கப்பட்ட கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்










