மலையகத்தின் கல்வித்துறைக்கு பெரும் சேவையாற்றிய மகத்தான மனிதர் தெய்வத்திரு. எஸ்.பாலசுப்பிரமணியம், நினைவேந்தல் நிகழ்வு இன்று (16.02.2022) பதுளை தமிழ் மகளீர் மகா வித்தியாலயத்தில் இடம்பெறுகின்றது.
கல்விமாணி கற்கைநெறி (2017/2020) ஆசிரியர் மாணவர்களும் கல்விசமூகமும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்து நினைவேந்தல் நிகழ்வில் நினைவஞ்சலி உரை, கவிதாஞ்சலி நிகழ்வு, மரநடுகை, வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் பகிர்ந்தளித்தல் ஆகியனவும் இடம்பெறவுள்ளன.
சிலரை ஏன் சந்தித்தோம் என நாம் எண்ணுவதுண்டு. ஆனால் ஒரு சிலரை மட்டும் ஏன் இவ்வளவு தாமதமாய் சந்திக்க நேர்ந்தது என யோசிப்பதுண்டு.
இப்படி மலையகத்தின் மாணவர்கள் பல ஏக்கத்துடன் நினைவுகூறும் ஓர் ஆசான் தெய்வத்திரு. சுந்தரம்பிள்ளை பாலசுப்ரமணியம் அவர்கள்.
இன்று இவரால் பட்டை தீட்டப்பட்ட பலர் கல்விமான்களாக அரச, தனியார் துறைகளில் சிறந்து விளங்குகின்றார்கள்.
தெய்வத்திரு. பாலசுப்ரமணியம் ஐயா அவர்களால் மலையக கல்வித்துறைக்கு ஆற்றப்பட்ட சேவை அளப்பரியது. இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஓர் சிறிய முயற்சியே இது.
மலையகக் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக திகழ்ந்தவர்களுள் திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள் முக்கியமானவராவார். இவர் மலையக மண்ணுக்கு பெருமை தேடித்தரும் மாணவர்களை உருவாக்குவதற்கு தமது அயராத உழைப்பை வழங்கியுள்ளார். அவர் எண்ணப்படியே அவர் வழிகாட்டி உயர்த்திய மாணவர்கள் இன்று பல துறைகளிலும் தமது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர்.
இம்மாணவர்களது பல்துறை வளர்ச்சியானது அவர் இல்லாவிடினும் அவரது பெருமை,உழைப்பு,முயற்சி அனைத்தையும் பறைசாற்றுகின்றமை பெருமைக்குரிய விடயமே.
பண்டாரவளை அம்பிடிகந்த தியகலயில் திரு,திருமதி சுந்தரம்பிள்ளை செல்லம்மாள் தம்பதியினருக்கு 1955 ஆம் ஆண்டு வைகாசி மாதம் ஒன்பதாம் திகதி பிறந்தார்.
அம்பிடிகந்த தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியை கற்ற இவர் உயர்கல்வியை பண்டாரவளை புனித ஜோசப் கல்லூரியிலும் கற்றார்.
பாடசாலையில் தமது திறமைகளை வெளிக்காட்டிய சிறந்த மாணவராத் திகழ்ந்தார். யாழ். பல்கலைக்கழகத்தில் வணிகவியல் இளங்கலை பட்டம் பெற்று மலையக மண்ணுக்கு பெருமை சேர்த்தார்.
திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள் தமது பட்டப்படிப்பை தொடரும் போதே நண்பர்களுடன் இணைந்து மலையக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உதவினார்.
ஒன்பது பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் பிறந்த இவர் குடும்பப் பொறுப்புகளை சுமந்து நிறைவேற்றியதுடன் தனது கடமைகளையும் செவ்வனே செய்து முடித்தார். திருமதி. வையாபுரி சரஸ்வதி என்பவரை மணம் முடித்து இல்லற வாழ்க்கையையும் இனிதாகவே வாழ்ந்தார். தனது பாரியாரின் கல்விப் பணிக்கும் உறுதுணையாகவே செயற்பட்டார்.
பண்டாரவளை சென்.தோமஸ் கல்லூரியில் இரு வருட கால ஆசிரியர் பணியை மேற்கொண்டதுடன் 1982-1991 ல் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் ஆசிரியராக, உப அதிபராக, கடமையாற்றியுள்ளார். பின்னர் ஆசிரிய ஆலோசகராகவும் தமது பணியை முன்னெடுத்துச் சென்றுள்ளார்.
திரு. பாலசுப்ரமணியம் அவர்கள் ஊவா மாகாணத்தில் ஆசிரியர் சங்கக் கிளைகளை உருவாக்கியதோடு அதனுடன் இணைந்து செயல்பட்டதில் பல வெற்றிகளையும் கண்டார். பதுளையில் கல்விமாணி கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டது, ஆசிரிய ஆலோசகர் குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டது, பதுளையில் வினாத்தாள் மதிப்பீட்டு நிலையம் ஆரம்பிக்கப்பட்டது இவை அனைத்தும் நிகழ்ந்தது இவர் உருவாக்கிய ஆசிரியர் சங்கங்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமையவே பாராளுமன்ற உறுப்பினரான மறைந்த வேலாயுதம் அவர்களின் உதவியுடன் பசறையில் தமிழ் பிரிவுக்கான ஆசிரியர் மத்திய நிலையத்தை உருவாக்கியதோடு அதன் முகாமையாளராகவும் பொறுப்பேற்று செயற்பட்டார்.
மலையக மண்ணின் கல்வ வளர்ச்சிக்கு வித்திட்டு செயற்பட்டார் என்று கூறுவது சாலப் பொருத்தம். அதுமட்டுமன்றி சமுக சேவைகளிலும் ஈடுபட்டுளளமை குறிப்பிடத்தக்கது.
“நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்” என்ற A.P.J அப்துல் கலாம் அவர்களின் அமுத வாக்கிற்கிணங்க வாழ்ந்து காட்டியவர் எமது தெய்வத்திரு.S. பாலசுப்ரமணியம் ஐயா அவர்கள்.
கல்விமாணி கற்கைநெறியின் சிரேஷ்ட விரிவுரையாளராக, பட்டப்பின் கல்வி டிப்ளோமா கற்கை நெறியின் இணைப்பாளராக இறுதிவரை செயற்பட்டு ஊவா மாகாண தமிழ் கல்வி சமூகத்திற்கு அரும்பணியாற்றிய எம் ஆசான் 2019 ஜூலை மாதம் 20ஆம் திகதி எம் சமூகத்தை மீளாத்துயரில் விட்டுச் சென்றுவிட்டார் .
காலம் உள்ளவரை அவரது நாமம் எம்மவர் மத்தியில் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது அயராத அர்ப்பணிப்பு மிக்க சேவையை போற்றி அவரின் வழிகாட்டலில் செதுக்கப்பட்ட சிலைகளாக நிற்கும் ஆசிரிய மாணவர்களாகிய நாங்கள் தெய்வத்திரு.S. பாலசுப்பிரமணியம் ஐயா அவர்களின் பாதம் பணிந்து வணங்கி நினைவஞ்சலியை சமர்ப்பணம் செய்கின்றோம்.
நடராஜா மலர்வேந்தன்










