2023 ஆம் ஆண்டு எமக்கு மிக முக்கியமான ஆண்டாகும். இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினமும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் வரலாற்றுத் தடம் பதிக்கும் ஆண்டாகும். இந்நிலையில் பொருளாதார அபிவிருத்தியை மையமாகக் கொண்டு பல வேலை திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடு அமைப்பு அமைச்சின் பிரஜா சக்தி பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகளின் சனத்தொகையை காண நிதியத்தின் நிதி உதவியோடு சேவ் த சில்ரன் அமைப்பு மலைநாட்டு புதிய கிராமங்கள் அதிகார சபை மற்றும் பிரஜா சக்தி அபிவிருத்தி செயல் திட்டம் என்பவற்றின் ஏற்பாட்டில் பாரத் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய கண்டி மாவட்டத்தில் கர்பிணி தாய்மார்களுக்கான சுகாதாரப் பொதிகளும் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக தெல்தோட்ட பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட மிகவும் பின் தங்கிய பெருந்தோட்ட மற்றும் கிராமப் பகுதிகளில் வாழும் பெண்களுக்கு சுகாதாரப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பாரத் அருள்சாமி,
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சூழ்நிலை காரணமாக பெண்கள் தங்களது குடும்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தங்களது சுகாதார மற்றும் பாதுகாப்பு வசதிகளை பிள்ளைகளுடைய கல்வியை மேற்கொள்ளவும் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.
எனவே 2023 ஆம் ஆண்டு தொழில் முனைவோருக்கான ஆண்டாக மாற்ற பல வேலை திட்டங்களை நான் முன்னெடுக்க உள்ளோம். அதே சந்தர்ப்பத்தில் மாணவர்களுடைய எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் போதைப் பொருளுக்கு எதிரான பல வேலை திட்டங்களையும் நாம் முன்னெடுத்துள்ளோம்.
இது தொடர்பாக காவல்துறையினரும் இலங்கை இராணுவத்தினரும் எமக்கு பல உதவிகளை செய்த வண்ணம் உள்ளனர். போதைப் பொருளை கொண்டு வரும் விஷமிகளிடமிருந்து எமது சிறுவர்களை பாதுகாக்கும் மிகப்பெரிய பொறுப்பு எம்மிடம் உள்ளது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தாலே இதனை தடுத்து நிறுத்த முடியும். எமது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்தியா வம்சாவளி மக்கள் பொருளாதார ரீதியில் பலமடைய பல வேலை திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து செல்கின்றோம். பெண் தலைமைத்துவத்தை எதிர்வரும் தேர்தல்களில் பெண் பிரதிநிதிகளை அதிகரிப்பதற்கான விசேட திட்டங்களையும் நாம் உள்வாங்கியுள்ளோம் என தெரிவித்தார்.
சுகாதாரப் பொதிகள் வழங்கும் நிகழ்வில் தெல்தோட்ட பிரதேச செயலாளர் திருமதி.ஆத்மா, பிரதேச செயலக அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள், பிரஜா சக்தி அதிகாரிகள், என பலர் கலந்து கொண்டு இருந்தார்கள்.
(க.கிஷாந்தன்)