எத்திமலை காவல் நிலையப் பொறுப்பதிகாரி சஞ்சய தர்மதாச, காவல்துறைமா அதிபரின் பணிப்புரைக்கமைய பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
மொனராகலை வலய பதில் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சிசில குமார, 15 கிலோகிராம் கஞ்சா செடிகளுடன் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் எத்திமலை காவல்துறை பொறுப்பதிகாரி சஞ்சய தர்மதாஸவும் கடந்த வியாழக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, இச்சம்பவம் தொடர்பில் மேலும் சிசில குமாரவின் சாரதி உள்ளடங்கலாக இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களும், மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.
அதன்பின்னர், காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பணிப்புரைக்கமைய, காவல்துறை அத்தியட்சகர் சிசிர குமார பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.
சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சிசிர குமார, எத்திமலை காவல் நிலையப் பொறுப்பதிகாரி தர்மதாச மற்றும் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் சாரதி சசிந்து மதுஷான் உள்ளிட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மொனராகலை மாவட்ட நீதிபதி சஜினி அமரவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
