திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை- மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தண்ணீர் மோட்டார் மற்றும் கையடக்க தொலைபேசிகள் களவாடப்பட்டுள்ளன என பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் பிரகாரம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடனன், களவாடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த 20 ற்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர்கள் தொடர்ச்சியாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இவர்களுக்கு எதிராக பல வழக்குகள் இடம் பெற்று வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் கூறினர்.