பதுளை, கந்தகொல்ல தமன்வர பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருந்தநிலையில் இன்று பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை, தமன்வர கந்தகொல்ல, புடலுமுல்ல பகுதியைச் 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் கடந்த (01) வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் வீடு திரும்பாததால் இன்று காலை அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து தேடுதல் மேற்கொண்ட போது, கந்தகொல்லை பாடசாலைக்கு அருகாமையில் உள்ள ஹெய்னரன்கொல்ல ஓயா பாலத்திற்கு அருகில் அவரின் மோட்டார் சைக்கிளை கண்டெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து நீரோடையின் கீழ் பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போதே உயிரிழந்தவரின் சடலம் இன்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பதுளை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
