பதுளை மாவட்ட உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் பதுளை கல்வி வலயம் முதலாம் இடம்
க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் பதுளை மாவட்டத்தின் பதுளை கல்வி வலயம் 67.97 சதவீத பெறுபேறுகளுடன் மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்றுள்ளதாக ஊவா மாகாண கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ள பகுப்பாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வலயத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 1838 மாணவர்கள் பல்கலைகழகங்களில் உயர்கல்வியைத் தொடர தகுதி பெற்றுள்ளனர்.
பசறை கல்வி வலயம் 66.98 சதலீத பெறுபேறுகளுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதுடன் இவர்களில் 361 மாணவர்கள் பல்கலைகழகங்களில் உயர்கல்வியைத் தொடர்வதற்கு விண்ணப்பிக்கத் தகுதிப் பெற்றுள்ளனர்.
இவ்வலயத்தின் ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி மாணவன் சதுர்சன் உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பாடப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடம்பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
வெலிமடை கல்வி வலயம் 64.60 சதவீத பெறுபேறுகளுடன் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளதுடன் 1113மாணவர்கள் பல்கலைகழகங்களில் உயர்கல்வியைத் தொடர்வதற்கு விண்ணப்பிக்கத் தகுதிப் பெற்றுள்ளனர்.
பண்டாரவளை கல்வி வலயம் 64.40 சதவீத பெறுபேறுகளுடன் நான்காம் இடத்தினையும், மஹியாங்கனை கல்வி வலயம் 63.05 பெறுபேறுகளுடன் ஐந்தாம் இடத்தினையும் வியலுவ கல்வி வலயம் 55.87 சதவீத பெறுபேறுகளுடன் ஆறாம் இடத்தையும் பெற்றுள்ளது.
பதுளை மாவட்டத்தில் 10242 பாடசாலை பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களில் 6646 மாணவர்கள் பல்கலைகழகங்களில் உயர்கல்வி கற்பதற்காக விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.1005 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பசறை நிருபர்










