இலங்கைக்கான கனடிய தூதுவர் இசபெல் மார்ட்டின் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடந்த இந்தச் சந்திப்பில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கேற்றனர்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தச் சந்திப்பில், தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான அவர்களின் நிலைப்பாடுகள், தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகள் மற்றும் அதனை அடைவதற்கான எதிர்கால நகர்வுகள், மாகாண சபை தேர்தல்கள் மற்றும் ஜனநாயக ரீதியிலான அதிகாரப் பகிர்வுக்கான முக்கியத்துவம், போருக்குப் பின்னரான மீளெழுச்சி மற்றும் கனடிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலைமைகளை நேரில் கண்டறியும் நோக்கில் கனடியத் தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அவர் நேற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குச் சென்று துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாவைச் சந்தித்ததுடன், வடமாகாண ஆளுநர் வேதநாயகனை அவரது பணியகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
