“இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் நாம் இணைந்து பயணிக்கவும், எதிர்வரும் தேர்தல்களில் சேர்ந்து போட்டியிடவும் எந்தத் தடையும் இல்லை. எனினும், தமிழரசுக் கட்சி வெறுமனே தேர்தலை மையமாகக் கொண்டு இயங்காமல், ஒரு கொள்கையை முன்வைத்து அணிதிரட்டலை மேற்கொள்ள வேண்டும்.”
– இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் வலியுறுத்தினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் மக்கள் கூட்டணிக்கு நல்லூர் பிரதேச சபையில் ஆட்சியமைக்க வேண்டிய தேவை இருந்தது. அதனால், இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் ஏற்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் அங்கு ஆட்சியமைத்தோம். அதேபோன்று, வேறு உள்ளூராட்சி சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு நாங்கள் ஆதரவு வழங்கியுள்ளோம். இதை மறுக்க முடியாது.
அதேநேரம், எதிர்வரும் தேர்தல்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் நாம் ஒற்றுமையாக இணைந்து போட்டியிடுவதற்கும் எவ்வித தடையும் இல்லை. அவர்களுடன் இணைந்து பயணிப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது.
ஆனால், தமிழரசுக் கட்சி தேர்தல் அரசியலுக்குள் மட்டுமே சிக்கிக்கொள்ளாமல், ஒரு கொள்கையையும் ஒழுக்க நெறிகளையும் முன்னிலைப்படுத்தி ஒரு வலுவான அணிதிரட்டலை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செயற்பட்டால், நாங்கள் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பயணிப்பதில் எந்தத் தடையும் இருக்காது.” – என்றார்.
