இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் முதலாவது சிரார்த்த தினத்தன்று மலையகத்துக்கான பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும் என்று இ.தொ.காவின் உப தலைவரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான கணபதி கணகராஜ் தெரிவித்தார்.
இறம்பொடையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” கடந்த காலங்களில் பட்டம் இருக்கிறதா, உயர்தரம் சித்தியடைந்துள்ளீர்களா, பட்டப்பின் படிப்பு என்றெல்லாம் கேள்விகேட்டே வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. ஆனால், இன்று சாதாரணதரப்பரீட்சையை பூர்த்திசெய்யமுடியாத ஒரு லட்சம் பேருக்கு அரச துறையில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது. நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, நியமனங்களை வழங்க ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.
கடந்த ஆட்சியில் வேலை எவ்வாறு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது? குருணாகலை பகுதியில் தேங்காய் பறித்துக்கொண்டிருந்தவர்களை, இங்கே கொண்டுவந்து பாடசாலைகளில் உதவியாளர்களாகவும், காவலாகிளாகவும் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். நமது பகுதி புறக்கணிக்கப்பட்டிருந்தது. கல்வி இராஜாங்க அமைச்சர் இருந்தும் என்ன பயன்? ” எனவும் அவர் குறிப்பிட்டார்.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்.