“மஹிந்த ராஜபக்ச திறைசேரியில் கொள்ளை அடிக்கவில்லை. மாறாக மக்கள் மனங்களையே கொள்ளையடித்துள்ளார்.” – என்று மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய எயர்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (12) வாக்குமூலத்தை பதிவு செய்தது.
சுமார் இண்டரை மணிநேர விசாரணையின் பின்னர் மஹிந்த ராஜபக்ச அங்கிருந்து வெளியேறினார்.
மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து மொட்டு கட்சியினர் திரண்டிருந்தனர். இதன்போதே மனோஜ் கமகே மேற்கண்டவாறு கூறினார்.
“ மே மாதம் என்பது பிரபாகரனின் கதையை முடித்த மாதமாகும். அதனால்தான் இந்த மாதத்தை குறிவைத்துள்ளனர். பிரபாகரனின் ஆத்மாவை சாந்தியடைய வைக்க ஆளுந்தரப்பு முயற்சிக்கின்றது.
மஹிந்த ராஜபக்ச என்பவர் சிங்கம். பொய்யுரைப்பவர் அல்லர். குகைக்குள் அவர் ஓடி ஒளியவில்லை. வந்து வாக்குமூலம் வழங்கிவிட்டு சென்றார்.
திறைசேரியில் கொள்ளை அடித்தவர்கள், நிலக்கரி மோசடியுடன் தொடர்புடையவர்கள் உள்ளிட்டோரையும் இவ்வாறு அழைத்து வந்து விசாரிக்கவும்.
மஹிந்த ராஜபக்ச என்பவர் இந்நாட்டு அரசியல் கலாசாரம். அவர்மீது கைவைத்தால் அழிவுதான் ஏற்படும்.” – எனவும் அவர் கூறினார்.
