புதிய அரசமைப்பு உருவாக்கம், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய அழுத்தம் மற்றும் காணி உரிமைக்காகக் குரல் கொடுத்தல் உள்ளிட்ட பிரதான விடயங்களில் ஒருங்கிணைந்து செயல்படவே தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இது அரசியல் மற்றும் தேர்தல் கூட்டணி அல்லவெனவும், ஒரு பொது மேடை எனவும் அவர் கூறினார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் தலைவர்களும், பிரதிநிதிகளும் கொழும்பில் நேற்று கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர்.
இதன்போது மனோ கணேசன் மேலும் கூறியவை வருமாறு:
“இது அரசியல் அல்லது தேர்தல் கூட்டணி அல்ல; ஒரு பொது மேடையாகும். எமது தாய்மொழி தமிழ், நாம் இலங்கையர்கள். எனவே, இது இனவாதத்திற்கு எதிரான கூட்டணியாகும். மாறாக, இதுவொரு இனவாதக் கூட்டணி கிடையாது.
சமத்துவமாக, சந்தோஷமாக, அதிகாரங்களைப் பகிர்ந்துகொண்டு வாழ்வது பற்றித்தான் இந்த பொது மேடை எடுத்து இயம்பவுள்ளது.
யுத்தம் முடிவடைந்திருந்தாலும், அது ஏற்படுவதற்குரிய அடிப்படைப் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. சிங்கள சகோதரர்கள் தொடர்பில் எமக்கு ஒரு புரிதல் உள்ளது. அதேபோல, எம்மைப் பற்றிய புரிதல் அவர்களுக்கும் ஏற்பட வேண்டும்.
அரசியல் அதிகாரப் பகிர்வு, நிர்வாக அதிகாரப் பகிர்வு, வளப் பகிர்வு, மொழி உரிமை என்பனதான் உண்மையான சமத்துவமாகும். இவை இன்றிக் சமத்துவம் பற்றிப் பேசுவதில் எவ்வித பயனும் இல்லை.
நாட்டில் புதிய அரசியலமைப்பு ஒன்று இயற்றப்பட வேண்டும். அதற்குரிய பணிகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன், நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.
வடக்கு, கிழக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். அதேபோல, மலையக மக்களுக்கு வாழும் உரிமையோடு, அவர்களின் வாழ்வாதாரத்திற்குரிய காணி உரிமையும் வழங்கப்பட வேண்டும்.”என்று மனோ கணேசன் வலியுறுத்தினார்.










