கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்!

கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்!

‘டித்வா’ அனர்த்த நிலைமையினால் வீடுகளை இழந்த கண்டி மாவட்ட மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதற்காகத் தேவையான காணிகளை விடுவிக்கும் செயல்முறையின் முன்னேற்றம் குறித்து பிரதேச செயலக மட்டத்தில் கேட்டறிந்த ஜனாதிபதி, எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்த்து அந்தப் பணிகளை விரைவாக நிறைவு செய்வதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று (12) பிற்பகல் நடைபெற்ற கண்டி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

‘டித்வா’ சூறாவளிக்குப் பின்னர் கண்டி மாவட்டத்தின் மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வருவதற்கும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராய்ந்த ஜனாதிபதி, பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு நஷ்டஈடு வழங்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு பிரதேச செயலாளரிடமும் தனித்தனியாகக் கேட்டறிந்தார்.

அனர்த்தத்தினால் கண்டி மாவட்டத்தில் 12,169 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இதில் மீள்குடியேற்றப்பட வேண்டிய அதிக ஆபத்தான பகுதியளவு சேதமடைந்த வீடுகள் 1,583 ஆகும்.

அத்துடன் கொடுப்பனவுச் சிக்கல்கள் உள்ள 2,304 வீடுகளும், NBRI பரிசோதனை செய்யப்பட்டு அறிக்கைகள் கிடைக்க வேண்டிய 3,795 வீடுகளும் உள்ளன.

இதன்படி, தற்போது உறுதியாகக் கொடுப்பனவுகளை வழங்கக்கூடிய வீடுகளின் எண்ணிக்கை 4,488 ஆகும். அவற்றில் 3,038 வீடுகளுக்கான கொடுப்பனவுகள் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

எஞ்சிய வீடுகளுக்கான கொடுப்பனவுகளையும் விரைவாக வழங்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தினார்.

அதேபோல், அதிக அபாய பிரதேசங்களுக்குள் உள்ளடங்குவதால் வேறு இடங்களில் குடியேற்றப்பட வேண்டிய குடும்பங்களுக்காகக் காணிகளை அடையாளம் காணும் செயல்முறை மற்றும் அதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அதிக அபாய பிரதேசங்களில் மக்கள் குடியேறுவதைத் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும், அது தொடர்பான தீர்மானங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவது அவசியம் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தனியார் தோட்டங்களில் வசிக்கும் மற்றும் மீள்குடியேற்றப்பட வேண்டிய தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் ஜனாதிபதி இங்கு விசேட கவனம் செலுத்தினார்.

மீள்குடியேற்றத்திற்காக முன்மொழியப்பட்டுள்ள, தற்போது தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கக் காணிகளை விரைவாக விடுவித்துக் கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தனி வீடுகளாக அன்றி, வீட்டுத் திட்டங்களாக மீள்குடியேற்றப்படும் போது அவற்றுக்கான உட்கட்டமைப்பு வசதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல் மற்றும் பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு நஷ்டஈடு வழங்க முடியாத சந்தர்ப்பங்களில், அந்த வீடுகளுக்கு முன்னால் உள்ள நிலத்தைப் பாதுகாப்பதற்காக பக்கச் சுவர்களை அமைக்கும் வேலைத்திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

வியாபாரச் சேதங்களுக்கான நஷ்டஈடு மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை மாற்றம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. விலை மாற்றம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு அடுத்த வாரத்திற்குள் தீர்வு வழங்க எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

மினிப்பே, உடுதும்பர மற்றும் மெததும்பர வனவிலங்கு சரணாலயங்களுக்குள் அமைந்துள்ள குடியிருப்புகளில் வாழும் மக்களின் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபயகோன், சுகாதார பிரதி அமைச்சர் ஹங்சக விஜேமுனி, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன , தனுர திசாநாயக்க, ஜகத் மனுவர்ண, ஈ.எம்.பஸ்நாயக்க, றியாஸ் பாரூக் உள்ளிட்ட ஆளும் தரப்பு எதிர்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், கண்டி மாநகர முதல்வர், உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், மத்திய மாகாண பிரதம செயலாளர், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த உள்ளிட்ட அரச அதிகாரிகளும், பாதுகாப்புப் பிரிவு பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles