தெற்காசிய நாடுகளின் மக்கள், தங்கள் அண்டை நாடுகளை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பது தொடர்பாக Pew Research Center நடத்திய புதிய கருத்துக்கணிப்பில், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளிலும் எதிர்மறையான கருத்துகளை விட அதிகமான நேர்மறையான கருத்துகளைப் பெற்ற ஒரே நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.
இந்த ஆய்வு 2026 பெப்ரவரி 8 முதல் மே 7 வரை நடத்தப்பட்டது. இதில் இந்தியாவில் 3,566 பேர், பாகிஸ்தானில் 1,039 பேர், பங்களாதேஷில் 1,044 பேர் மற்றும் இலங்கையில் 2,513 பேர் பங்கேற்றனர்.
இலங்கை குறித்த பார்வையில், பாகிஸ்தானியர்களில் 51%, இந்தியர்களில் 49%, பங்களாதேஷியர்களில் 47% பேர் சாதகமான கருத்தை தெரிவித்துள்ளனர். இந்த மூன்று நாடுகளிலும் இலங்கை குறித்த எதிர்மறையான கருத்துகள் சாதகமான கருத்துகளை விட குறைவாகவே பதிவாகியுள்ளன.
அதேவேளை, இலங்கையர்கள் இந்தியாவை மிகவும் சாதகமாகப் பார்க்கின்றனர். 79% இலங்கையர்கள் இந்தியா குறித்து நல்ல அபிப்பிராயம் கொண்டுள்ளனர். மேலும், உலக விவகாரங்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சரியான முடிவுகளை எடுப்பார் என்ற நம்பிக்கையை 70% இலங்கையர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இதற்கு மாறாக, இந்தியா குறித்து பாகிஸ்தானில் சாதகமான பார்வை மிகவும் குறைவாக உள்ளது. பாகிஸ்தானியர்களில் வெறும் 7% பேர் மட்டுமே இந்தியாவை சாதகமாகப் பார்க்கின்றனர். பங்களாதேஷில் அந்த எண்ணிக்கை 42% ஆக உள்ளது.
மேலும், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இடையேயான பரஸ்பர நன்மதிப்பும் அதிகரித்துள்ளது. 66% பாகிஸ்தானியர்கள் பங்களாதேஷை சாதகமாகவும், 54% பங்களாதேஷியர்கள் பாகிஸ்தானை சாதகமாகவும் பார்க்கின்றனர். இலங்கையர்களிடையே பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் குறித்த நல்ல அபிப்பிராயமும் 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உயர்ந்துள்ளது.
இந்த முடிவுகளின் அடிப்படையில், இந்தியா–பாகிஸ்தான் உள்ளிட்ட பிராந்திய அரசியல் முரண்பாடுகள் நிறைந்த தெற்காசியாவில், பல்வேறு நாடுகளின் மக்களிடையே ஒரே நேரத்தில் நன்மதிப்பைப் பெற்றுள்ள நாடாக இலங்கை தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது என்று Pew ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.










