2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் இலங்கை அரசு, அமைதியான போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்குவதற்கும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்களுக்கும் எதிராக அவசரகாலச் சட்டத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை நிபுணர்கள் கண்டித்துள்ளனர்.
தலைநகர் கொழும்பிலும் நாடு முழுவதிலும் பல மாதங்களாக நடைபெற்ற வெகுஜனப் போராட்டங்களைத் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ச, ஜூலை 13 அன்று நாட்டை விட்டு வெளியேறி மறுநாள் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினார்.

அவருக்குப் பின் வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜூலை 17 அன்று மற்றுமொரு அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தினார்.
இந்நிலையில், நாடாளுமன்றம் ஜூலை 27ஆம் திகதியன்று தற்போதைய அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்தது.
இதன் மூலம், ஊரடங்கு உத்தரவை விதித்து பாதுகாப்புப் படைகளுக்குப் பரந்த மற்றும் விருப்பமான அதிகாரங்களை வழங்கும் கட்டளைச் சட்டத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இத்தகைய அதிகாரங்கள், நீதிமன்ற மேற்பார்வையின்றி போராட்டக்காரர்களைத் தடுத்து வைப்பதற்கும், தனியார் சொத்துக்களைச் சோதனை செய்வதற்கும் படையினரை அனுமதிக்கின்றன.
அவசர நடவடிக்கைகளை தவறாகப் பயன்படுத்துவது குறித்து பலமுறை அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அதில் பலனில்லை.
இந்தநிலையில், அமைதியான ஒன்றுக்கூடல் மற்றும் கருத்துச் சுதந்திரத்துக்கான உரிமைகளைச் சட்டபூர்வமாகப் பயன்படுத்துவதை மீறும் வகையில் இது போன்ற நடவடிக்கைகளைக் கண்டிப்பதாக ஐ.நா. மனித உரிமை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் உரையாடலுக்கான வழிகளை மேலும் மூடுகின்றன மற்றும் பதற்றங்கள் அதிகரிக்கும் அரசியல் சூழலை ஏற்படுத்துகின்றன என்று ஐ.நா. மனித உரிமை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
2022 மார்ச் முதல் இலங்கை எதிர்கொள்ளும் பாரதூரமான பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதில் அரசின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கானோர் கொழும்பிலும் நாடு முழுவதிலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் பணவீக்கம் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் நீடித்த மின்வெட்டு மற்றும் சட்டவிரோத நிதிப் பாய்ச்சலைச் சரியாக நிர்வகிக்கத் தவறியதன் எதிரொலியாக வெகுஜனப் போராட்டங்கள் வேகத்தைப் பெற்றன.
இதன்போது, பாதுகாப்புப் படையினர் அவசரகால நடவடிக்கைகளால் தங்களுக்கு வழங்கப்பட்ட விரிவான அதிகாரங்களைப் பயன்படுத்தி, கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளைப் பயன்படுத்த எதிர்ப்பு இயக்கத்தை ஒடுக்கினர்.
2022 ஜூலை 22 அன்று தலைநகர் கொழும்பு – காலிமுகத்திடலில் உள்ள போராட்டக்காரர்களின் முகாமில் பொலிஸார் மற்றும் இராணுவத்தின் கூட்டு நடவடிக்கையின்போது 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலர் கைதுசெய்யப்பட்டனர்.
இதையடுத்து கடந்த வாரங்களில் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டுள்ளவர்கள், எதிர்ப்பாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பலர் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.
இதைக் கண்டித்துள்ள ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள், தேசிய பாதுகாப்பை ஒரு சாக்குப்போக்காகக் கொண்டு கருத்து வேறுபாடுகளின் வெளிப்பாடுகளை மூடிவிட முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
மனித உரிமைப் பாதுகாவலர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் அமைதியான போராட்டங்களின் பின்னணியில் பாதுகாக்கப்பட வேண்டும், போராட்டங்களில் பங்கேற்பதற்காக குற்றவியல் பொறுப்பை அவர்கள் எதிர்கொள்ளக்கூடாது என்றும் ஐ.நா. மனித உரிமை நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் அரசு மீண்டும் மீண்டும் அவசரகால நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறும் அதற்குப் பதிலாக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைக் குறைப்பதற்கு அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து இலங்கையர்களுடன் திறந்த மற்றும் உண்மையான உரையாடலை நாடுமாறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை நிபுணர்கள் கோரியுள்ளனர்.
