ஆட்டை திருடி இறைச்சிக்காக வெட்டிய மூவர் ராகலையில் கைது

இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தை சேர்ந்த இருவரும்,இராகலை மேல் பிரிவு தோட்டத்தை சேர்ந்த ஒருவருமாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,..

இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் உடல் ஊனமுற்ற நபர் ஒருவர் தனது குடும்ப வாழ்வாதாரத்திற்காக ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இவர் கடந்த வெள்ளிக்கிழமை வழமைப்போல ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். பின் மாலை ஆடுகளை மந்தைக்கு அழைத்து சென்ற போது ஆடுகளில் ஒன்று குறைந்துள்ளது.

அதேநேரத்தில் இராகலை பச்சத்தண்ணி மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ள தேயிலை மலையில் தோட்ட மக்களுக்கு குடி நீர் வழங்கும் பகுதிக்கு தண்ணீர் திறக்க சென்ற நபர் அவ்விடத்தில் இறைச்சிகளுடன் இரண்டு டியுலிப் கை பைகள் இருப்பதை அவதானித்து தோட்ட மக்களுக்கும் இராகலை பொலிசாருக்கும் தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் டியுலிப் கை பைகளை பரிசோதித்த போது அதில் ஆட்டிறைச்சி இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

அதேநேரத்தில் காணாமற் போயுள்ள தனது ஆட்டை இறைச்சியாக்கியுள்ளதாக ஆட்டு சொந்தக்காரர் பொலிசாருக்கு தெரிவித்துள்ளதுடன் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இப்பகுதியில் தொடர்ச்சியாக ஆடு, மாடுகளை களவாடி இறைச்சிக்காக விற்பனை செய்து வருவதை தொழிலாக கொண்டுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Related Articles

Latest Articles