ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சின்னம் ‘அழுகிய முட்டை’யா என கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா, மக்களை ஒடுக்குவதற்காக அரசு அடக்குமுறையைக் கையாள்கின்றது எனவும் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம்மீது ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தலைமையில் குண்டர் குழு தாக்குதல் நடத்தியுள்ளது. அழுகிய முட்டை வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன. நாட்டில் தற்போது அழுகிய முட்டை தாக்குதலே இடம்பெற்றுவருகின்றது. இதற்கு அரச அனுசரணையும் இருப்பதுபோலவே தெரிகின்றது.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் மனித உரிமைகள் பற்றி கலந்துரையாடப்பட்டுவரும் நிலையில், மனித உரிமைகள் இங்கு மீறப்படுகின்றன. ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.
அதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர, மக்களின் எதிர்ப்பை வெளிக்காட்டவே ஜனாதிபதியின் வீட்டுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார். தற்போது அவர் பழிவாங்கப்படுகின்றார். அவரின் வீட்டை குண்டர் குழு சுற்றிவளைத்துள்ளது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
நாட்டு மக்கள் இன்று வரிசைகளில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது. மக்களை ஒடுக்குவதற்காக குண்டர் குழுக்கள் பயன்படுத்தப்படுகின்றன.” -என்றார்.
