இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்த மிகவும் நேர்மையான மனிதர் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவு குறித்து வௌியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் மலையக மக்களின் அபிவிருத்தி திட்டங்களில் நிதி அமைச்சராக இருந்து முக்கிய பங்காற்றியவர் நண்பர் மங்கள சமரவீர ஆவார்.
குறிப்பாக மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை தாமதமின்றி வழங்குவதில் பெரும் பங்கு விகத்தார். மலைநாட்டு அபிவிருத்தி அதிகார சபை உருவாக்கப்பட்ட விடயத்திலும் மங்கள சமரவீர ஒத்துழைப்புடன் செயற்பட்டார்.
மாத்தறை மாவட்ட மலையக மக்கள் குறித்தும் நாட்டில் வாழும் சிறுபான்மை மக்கள் குறித்தும் மிகவும் கரிசனையுடன் செயற்பட்டவர்.
இவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு எனது ஆழந்த அஞ்சலிகளை செலுத்துவதுடன் அவரது குடும்பத்தார் மற்றும் ஆதரவாளர்களுக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
