ஒருவர் சீரும் சிறப்புடன் வாழும்போது அவரை வாழ்த்தி – வணங்கி மகிழ்விப்பதைவிட, வாழ்வின் ஏதேனும் ஒரு கட்டத்தில் ஒருவர் விழும் பட்சத்தில் அவர் மீண்டெழுவதற்கு கைகொடுத்து – முன்னோக்கி நகர்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துகொடுத்து மகிழ்வதே மகத்தான – மனிதநேயம்மிக்க பணியாகும். வாழ்வில் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய மிக முக்கிய பண்புகளுள் இது பிரதானமாகும்.
இலங்கை விவகாரத்தில் அண்டை நாடான இந்தியாவும் இதே அணுகுமுறையைதான் பின்பற்றிவருகின்றது. அண்மைக்கால சம்பவங்கள், நிகழ்வுகள் இதனை சான்று பகர்கின்றன.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் உள்நாட்டு போர் உள்ளிட்ட காரணங்களால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்தாலும் 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலைமையே மிக மோசமாகும். இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு பூஜ்ஜிய நிலையை அடைந்தது. உணவு, மருந்து உட்பட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்குகூட நிதி இருக்கவில்லை. எரிபொருள், எரிவாயு இறக்குமதிக்குவழி வழியில்லாமல் நாட்டில் வரிசை யுகம் உருவானது. தொடர் மின்வெட்டும் அமுலானது. இதனால் வர்த்தக துறைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டன. மறுபுறத்தில் உணவு பணவீக்கம் உச்சம் தொட்டது. வரிசைகளிலும், உணவின்றியும் மக்கள் செத்து மடியும் பெருந்துயர் சம்பவங்களும் பதிவாகின. நாட்டு மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. நாளைய நாள் என்பது நிச்சயமற்றதாக இருந்தது.
இந்நிலையில் இலங்கையை வங்குரோத்து நாடாக பிரகடனப்படுத்தி, எல்.சீ. திறப்பதற்குகூட பல நிறுவனங்கள், நாடுகள் கதவடைப்பு செய்தபோது, முந்தியடித்துக்கொண்டு – முதல் நாடாக டொலர்களை வாரி வழங்கிய நாடுதான் இந்தியா. அதுமட்டுமா வரியை யுகத்தை கட்டுக்குள் கொண்டுவர நிவாரண திட்டத்தின் அடிப்படையில் எரிபொருள் கப்பல்களையும் அனுப்பி வைத்திருந்தது. இவ்வாறு இந்தியா வழங்கிய டொலர் உதவியால்தான் அத்தியாவசிய உணவு பொருட்களையும், மருந்துகளையும் இறக்குமதி செய்து, நெருக்கடி நிலைமை ‘மோசமான நிலைக்கு’ செல்வது தவிர்க்கப்பட்டது.
அதாவது ‘பொருளாதார நெருக்கடி’ என்ற கொடிய நோயால் உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருந்த இலங்கைக்கு இந்தியாவே உரிய முதலுதவி வழங்கி, ‘ஒட்சீசன்’ கொடுத்தது எனலாம்.
இலங்கையில் இவ்வாறு நெருக்கடி நிலை தாண்டவமாடியபோது, அண்டை நாடான இந்தியா நடந்துகொண்ட விதமானது, இலங்கையில் உள்ள சில இந்திய எதிர்ப்பு கூட்டத்தைக்கூட வேறுகோணத்தில் சிந்திக்க வைத்தது. டில்லி தொடர்பான தமது விம்பம் தவறானது என்பதை புரிய வைத்தது.
இந்தியாவின் இந்த உதவி எவ்வளவு பெறுமதிமிக்கது – முக்கியத்துவமிக்கது என்றால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே தனது கொள்கை விளக்க உரையின்போது ‘மூச்சு தந்த இந்தியா’ என விளிக்கும் அளவுக்கு பயன்மிக்கதாக அமைந்தது.
இலங்கையில் யார் ஆட்சியில் உள்ளனர் என எடைபோட்டு உதவி வழங்கும் நாடு அல்ல இந்தியா. மாறாக மக்கள் நலனே முதன்மை பெறுகின்றது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, பஸில் ராஜபக்ச நிதி அமைச்சராக செயற்பட்டார். அவர் 2022 இல் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு, கடன் பெறுவதற்கான பேச்சுகளை வெற்றிகரமாக நிறைவுசெய்தார்.
தற்போது இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றார். இந்நிலையில் பன்நாட்டு கடன் மறுசீரமைப்பு, இலங்கை கடனுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதல் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவின் பங்களிப்பு – வகிபாகம் என்பது மிக முக்கியமானது. ஏனெனில் இந்தியா எடுக்கும் முடிவுகளை அடிப்படையாகக்கொண்டே சில மேற்குலக நாடுகள் இலங்கை விவகாரத்தில் முடிவுகளை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தேவையான உதவிகளை வழங்கி, இலங்கையை தூக்கிவிட்ட இந்தியா, தற்போது இலங்கையை நிலைப்படுத்துவதற்கு தேவையான சர்வதேச ஆதரவுகளையும் திரட்டிகொடுத்துவருகின்றது. இதில் பிரதானமானது சர்வதேச நாணய நிதிய விவகாரம்.
அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தாண்டவமாடியபோது அதனை கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு கொடையாக தடுப்பூசிகளை வழங்கிய முதல் நாடும் இந்தியாதான். கொரோனா வேகமாக பரவி சுகாதார கட்டமைப்பு ஸ்தம்பிதமடைந்தபோது, வாயு, மருந்து உள்ளிட்ட உதவிகளையும் தாமாக முன்வந்து வழங்கிய நாடுதான் இந்தியா.
இலங்கை கடற்பரப்புக்குள் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்து எரிந்தபோது அந்த தீயைக் கட்டுப்படுத்தி, கடல் வளத்தை பாதுகாப்பதற்கான நவீன தொழில்நுட்பம், உபகரணங்கள் இலங்கை வசம் இருக்கவில்லை. இந்த நெருக்கடி நிலையின்போதுகூட தமது நாட்டு படைகளை அனுப்பி பாரிய கடல் வள அழிப்பை தடுப்பதற்கு இலங்கைக்கு தோள் கொடுத்தது இந்தியா.
இவ்வாறு இந்தியா வழங்கிவரும் உதவிகளை பூகோல அரசியல் நலன், இராஜதந்திரம் வியூகம் என்று மட்டுமே பாடமெடுக்கும் ஒரு சிலருக்கு, அதன் பின்னால் உள்ள மனித நேயம், நட்பு, அண்டை நாடு என்ற பாசம் உள்ளிட்ட பக்கங்கள் தெரியாமல் – புரியாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும். ‘நெருக்கடியின்போது நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிய’ அயல்நாட்டின் உண்மையான அக்கறை பற்றியும் இப்படியானவர்கள் பாடமெடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.
ஒரு தாய் பிரசவ வலியில் துடிக்கும்போது, “ உன்னை வைத்தியசாலைக்கு அழைத்துசென்று காப்பாற்றுகின்றேன், குழந்தையை மட்டும் எனக்கு தந்துவிடு” என பேரம் பேசுவது நாசிசவாதத்தைவிட பயங்கரமானது. அந்த தாயை வைத்தியசாலைக்கு கொண்டுசென்று, தாய், சேய் ஆகிய இருவரின் உயிர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என நினைப்பது கடவுள் உள்ளமாகும். இலங்கை விவகாரத்தில் இந்தியாவிடம் ‘அந்த உள்ளம்’ இருப்பதை இலங்கையர்கள் தற்போது தெளிவாக உணர்ந்துவிட்டனர்.