” மக்கள் சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றாவிடின் இலங்கையில் அடுத்த 100 நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டக்கூடும் – என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் நேற்று எச்சரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சாதாரணமாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரொருவர் மூலம் நான்கு, ஐந்து நாட்களுக்குள் இருவருக்கு வைரஸ் பரவினால்கூட, ஐந்து நாட்களுக்கு ஒரு தடவை தொற்றாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகக்கூடும்.
இந்நிலைமை தொடர்ந்தால் அடுத்த 100 நாட்கள் செல்வதற்குள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டக்கூடும்.
எனவே, வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபரொருவர், அடுத்தவருக்கு தொற்று பரவாத விதத்தில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துகொள்ள வேண்டும். ஏனையோரும் பிற நபர்களிடமிருந்து தமக்கு தொற்று ஏற்படாத விதத்தில் செயற்படவேண்டும். அதற்காக சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வாழப்பழக வேண்டும்.” – என்றார்.










