ஈழத்தமிழர்களின் இறைமையை நிலைநாட்ட ‘சமஷ்டி’யே வேண்டும்

ஈழத்தமிழர்களின் அரசியல் உரித்துகளை நிலைநாட்ட சமஷ்டி முறையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வே காலத்தின் தேவையானது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் எம்.பி., ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் வலியுறுத்தியுள்ளர்.

ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமை கண்காணிப்பாளர் நாச்சோ சான்செஸ் அமோர், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கார்மன் மொறேனோ உள்ளிட்ட குழுவினருக்கும் சிவஞானம் சிறீதரன் எம்.பிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது.

இதன்போது, கடந்த ஜனாதிபதித் தேர்தல் குறித்த கருத்துப் பகிர்வுகள் இடம்பெற்ற சமநேரத்தில், ஈழத்தமிழர்களின் அரசியல் உரித்துக் கோரும் பயணத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பிலும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் குறித்தும் கோரப்பட்ட போது, உள்ளக சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் இணைந்த வடக்கு – கிழக்குக்கு சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வு என்பதுதான் சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசும் சேர்ந்து ஒஸ்லோவில் இணங்கிக் கொண்ட இறுதி விடயம் என்ற அடிப்படையில் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கும் சமஷ்டி முறைமைக்கும் இடையிலான நடைமுறை வேறுபாடுகள், 13 ஆவது திருத்தச் சட்டத்தை புறந்தள்ளி சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டியதன் நியாயப்பாடுகள், கனடா, சுவிஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் சமஷ்டி முறைமையையும், இந்திய மாநில சுயாட்சி முறைமையையும் அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் சமஷ்டியை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ள யதார்த்தப் புறநிலைகள் குறித்து சிறீதரன் எம்.பி., ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் வலியுறுத்தினார்.

இதன்போது தமது குழுவினால் தயாரிக்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு அறிக்கையின் பிரதி ஒன்றை, தமிழர் பிரதிநிதிகள் சார்பில் சிறீதரன் எம்.பியிடம் குழுவின் தலைமை கண்காணிப்பாளர் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles