தீக்கிரையான ”எக்ஸ் பிரஸ் பேர்ள்” கப்பலை உடனடியாக ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் அனர்த்தத்திற்கு உள்ளான கப்பலை, ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்வது தொடர்பில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.
கடந்த மே 09ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து புறப்பட்டு, 19ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு அருகே மேற்படி கப்பல் வந்து சேர்ந்தது முதல் நடந்த அனைத்து விவரங்களையும் துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன இன்று விபரித்தார்.
அனர்த்தத்திற்கு உள்ளான மேற்படி கப்பல் மூழ்கிவிடும் அபாயத்தில் இருப்பதனை, கடல் சார் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் இன்று சுட்டிக்காட்டினர்.
அவ்வாறாக நிகழ்ந்தால், அதனால் கடற் சூழலுக்கு ஏற்படக்கூடிய சேதத்தை குறைப்பதற்காக, கப்பலை ஆழ்கடலுக்குள் கொண்டு செல்வது மிகவும் பொருத்தமான நடவடிக்கையாக அமையும் என்பது அவர்களின் முன்மொழிவாக இருந்தது.
அதன்படி – தொழில்நுட்ப அம்சங்களின் அடிப்படையில், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் – கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்து கொண்டு செல்ல உடனடியாக உத்தரவு பிறப்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
இந்த விடயத்தில் எடுக்கப்படும் தீர்மானமானது – தொழில்நுட்ப விடயங்களின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதோடு அரசியல் விடயங்களை அதனுடன் சம்பந்தப்படுத்தக்கூடாது என்பதனையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, நாலக கொடஹேவா, சட்ட மா அதிபர் சஞ்ஞெய் ராஜரத்தினம், ஜனாதிபதி செயலாளர் பி. பீ. ஜயசுந்தர, பாதுகாப்பு செயலாளர் (ஓய்வு பெற்ற) ஜெனரல் கமல் குணரத்ன, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள், துறைமுகங்கள், சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை, நாரா உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
