காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மீள கட்டியெழுப்படுமா? அமைச்சர்கள் திடீர் விஜயம்!
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள கட்டியெழுப்ப முடியுமா என்பது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆராய்ந்துவருகின்றது.
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் அமைச்சர் சந்திரசேகர் ஆகியோர் இன்று காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சென்றிருந்தனர்.
1950 களில் ஆரம்பிக்கப்பட்ட இத்தொழிற்சாலை போர் காரணமாக 1990 களில் மூடப்பட்டது.
தற்போது இயங்காநிலையில் காணப்படும் சீமெந்து தொழிற்சாலையை, சீமெந்து உற்பத்திக்கென ஆரம்பிப்பதற்கு பல சவால்கள் உள்ளன. அவை தொடர்பில் ஆராயப்பட்டன எனவும், சீமெந்து தொழிற்சாலையாக அல்லாமல், வடக்குக்கு பொருளாதார பலன் தரக்கூடிய வேறு திட்டங்களை இங்கு செயல்படுத்தலாமா என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார்.
உரிய ஆய்வுகள், கலந்துரையாடல்களின் பின்னர், மக்களுக்கு பலனளிக்கும் வகையில் தீர்மானம் எட்டப்படும் எனவும் தனது முகநூல் பக்கத்தில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.










