‘குரங்கு கையில் பூமாலையா’ – ஜனாதிபதி செயலணிமீது வடிவேல் சுரேஷ் சொற்போர் தொடுப்பு

” ஒரே நாடு – ஒரே சட்டம்” என்பதற்கான ஜனாதிபதி செயலணி, ஞானசார தேரர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளமை கேலிக்கூத்தாகும் – என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் எம்.பி. விமர்சித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை வழிநடத்த ஒரு குற்றவாளியை நியமிப்பது “குரங்கின் கையில் பூமாலை” கொடுத்தது போல்தான் உள்ளது. இதிலும் மிகவும் வேதனைக்குறிய விடயம் எதுவெனில் இச் செயலணிக் குழாமில் தமிழ் அங்கத்துவம் எதுவும் இடம்பெறவில்லை என்பதே.

நாம் எதையும் மறக்கவும் இல்லை , மன்னிக்கவும் இல்லை. கடந்த காலங்களில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான பல்வேறு வன்முறை சம்பவங்கள் ஏற்படுவதற்கு மூல காரணமாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இருந்துள்ளார் என பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அது யாவரும் அறிந்ததொன்றாகும்.

கலகொடஅத்தே ஞானசார தேரரின் வழிகாட்டலின் கீழ், இலங்கையிலுள்ள பல முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றஞ் சுமத்தப்பட்டது.

அத்துடன், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு செயற்பாடுகளை கண்டித்து, கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்த காலங்களில் பெரிய போராட்டங்களையும் நடத்தியிருந்தார்.

சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் செயற்பாடுகளை கலகொடஅத்தே ஞானசார தேரர் ஈடுபட்டு வருவதாக கடந்த காலங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்ட போதிலும் அவருக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு கூறிக்கொண்டே செல்லும் அளவிற்கு அடுக்கடுக்காக குற்றத்தில் ஈடுபட்ட ஒரு குற்றவாளியின் தலைமையில் இச் செயலணி அமைக்கப்பட்டமை சிறுபான்மை மக்களிடையே பெரும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது. இச் செயலணியில் தமிழ் அங்கத்துவம் இல்லை என்பதும் கண்டனத்துக்குறிய விடயமாகும். ” – என்றும் வடிவேல் சுரேஷ் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

நிருபர் – நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles