சந்தேக நபரை பிடிப்பதற்காக ஆற்றுக்குள் இறங்கி காணாமல்போய் இருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுமார் 30 மணிநேர தேடுதலின் பின்னர் நீர்க்கொழும்பு களப்பு பகுதியில் இருந்து அவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமையான நபரொருவர் ஜா – எல பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு பொலிஸார் அழைத்துச்செல்ல முற்படுகையில், பொலிஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள ஆற்றில் நேற்று முன்தினம் பாய்ந்துள்ளார்.
அவரை பிடிப்பதற்கு பொலிஸாரும் ஆற்றில் இறங்கியுள்ளனர். இதன்போதே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நீடில் அடித்துச்செல்லப்பட்டுள்ளார். நேற்று முதல் தேடுதல் பணி இடம்பெற்றது. கடற்படையின் சுழியோடிகள் களமிறக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் ஜா – எல ஆற்றில் நீரில் மூழ்கி காணாமல்போன இடத்தில் இருந்து ஆறு கிமீ தொலைவில் உள்ள நீர்க்கொழும்பு களப்பில் இருந்து சடலம் நேற்று மாலை 4 மணிக்கு மீட்கப்பட்டுள்ளது.
ஜா – எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் யாழ். சாவகச்சேரியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி பிரகாசன் (வயது – 26) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.










