ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சு பதவி வழங்கப்படுமானால் அதனை ஏற்று செயற்படுவதற்கு தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பொன்சேகா வெளியேறவுள்ளதால், பாதுகாப்பு அமைச்சு பதவி தங்களுக்கு வழங்கப்படுமா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாட்டுக்கு தேவையான விடயங்களை செய்யவே ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளோம். ஸ்தீரமானதொரு அரசை ஸ்தாபிப்பதே எனது அணியின் நோக்கம்.
நான் பதவிகளை ஏற்பதற்கோ அல்லது தேர்தலில் போட்டியிடவோ தனிப்பட்ட ரீதியில் எதிர்பார்க்கவில்லை. எனக்கு உடலில் இன்னும் பலம் உள்ளது. எனவே, நாட்டுக்கு எதையேனும் செய்வதே எமது எதிர்பார்ப்பாகும்.
பாதுகாப்பு அமைச்சு தொடர்பில் சஜித் பிரேமதாசவுடன் பேச்சு நடத்தவில்லை. எனினும், குறித்த பதவியை நான் ஏற்க வேண்டும் என கட்சி தலைவர், கட்சி மற்றும் நாட்டு மக்கள் கருதினால் அதனை ஏற்று செயற்படுவதற்குரிய வலிமை உள்ளது.
பொன்சேகாவின் நூல் வெளியீட்டு விழாவில் நானும் பங்கேற்றிருந்தேன்.” – என்றார்.










