“ சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிக்கு ஆலையை விரிவுபடுத்துவதற்கான திட்டம் தொடர்பில் அமெரிக்க தூதுவர் என்னுடன் பேச்சு நடத்தியமை உண்மையே. பகிரங்க விலைமனுகோரல் ஊடாகவே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும். இலங்கைக்கு சாதகமான தரப்புக்கே வாய்ப்பு வழங்கப்படும். இதுவிடயத்தில் எவரின் அழுத்தங்களுக்கும் அடிபணியப்போவதில்லை.” – என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில திட்டவட்டமாக அறிவித்தார்.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி,
“ சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிக்கு ஆலையை விரிவுபடுத்துவதற்கான டெண்டரை (விலைமனுகோரலை) தமக்கு வழங்குமாறு அமெரிக்க தூதுவர் உங்களை வலியுறுத்திவருகின்றார். இவ்வாறான அழுத்தத்தை அமெரிக்கா நேரில் விடுக்கின்றதா அல்லது அமெரிக்காவுடன் தொடர்புடைய நபர்கள் ஊடாக விடுக்கப்படுகின்றதா? இதனால் உங்கள் அமைச்சு பதவிக்கும், அரசியல் பயணத்துக்கும் ஏதேனும் சிக்கல் உள்ளதா” – என்று வலுசக்தி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் உதய கம்மன்பில,
“ பிரதமரின் பரிந்துரையின் பிரகாரம் ஜனாதிபதியாலேயே எனக்கு வலுசக்தி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. எனவே, இவ்விருவருமே எனக்கு மேலானவர்கள். அமைச்சு தொடர்பில் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். தகவல்களைப் பெற்றுள்ளனர். ஆனால் அழுத்தங்களைப் பிரயோகித்தில்லை. வெளிநாட்டுத் தூதுவர்கள் என்னை சந்தித்து பேச்சு நடத்தியமை தொடர்பில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் தெரியப்படுத்தியுள்ளேன்.
தமது நாட்டிலுள்ள பாரிய நிறுவனங்களுக்காக முன்னிலையாகி தூதுவர்கள் என்னிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர். இலங்கை வரலாற்றிலேயே இது பாரியதொரு வேலைத்திட்டமாகும். எப்படிதான் முன்னெடுத்தாலும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படக்கூடும். எனவே, பகிரங்க விலைமனு கோரல் (டெண்டர்) ஊடாக, இலங்கைக்கு மிகவும் நன்மை பயக்ககூடிய டெண்டரை முன்வைப்பவருக்கே வழங்கப்படும். உங்களுக்கும் குறித்த விலைமனுகோரலில் பங்கேற்க முடியும் என தூதுவர்களுக்கு நான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளேன்.
அமெரிக்க தூதுவர் எனக்கு கடிதம் எழுதியது உண்மை, என்னை சந்தித்ததும் உண்மை. உங்களுக்கு ஒரு உத்தரவாதத்தை வழங்குகின்றேன். எவரினதும் அழுத்தங்களுக்கு அடிபணியமாட்டேன்.” – என்றார்.










