சீன விஜயத்தின்போது அந்நாட்டுடன் பேச்சு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள விடயங்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலிறுத்தியுள்ளது.
ஜனாதிபதி அநுர, ஜனவரி முற்பகுதியில் பீஜிங் செல்லவுள்ள நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘ இந்தியா எமது அயல் நாடு. எனவே, அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகம் தொடர்பில் அந்நாட்டுடன் உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். இவ்வாறு இந்தியாவுடன் நெருங்கியை தொடர்பை பேணும் அதேவேளை ஏனைய நாடுகளுடனும் ஒன்றித்து பயணிக்க வேண்டும்.
இந்தியாவுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் இன்னும் முழுமையாக அறிவிக்கவில்லை. ஒரு சில விடயங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணப்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு முழுமையாக தெளிவுபடுத்த வேண்டும்.
எட்கா ஒப்பந்தத்துக்கு தேசிய மக்கள் சக்தியே கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. அது தொடர்பான பேச்சுகளை தொடர்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. எனவே, எட்கா தொடர்பிலான அநுர அரசாங்கத்தின் அணுகுமுறை என்ன? இது பற்றியும் தெளிவுபடுத்த வேண்டும்.
அதேவேளை, சர்வதேசத்துடன் இரகசிய ஒப்பந்தங்கள் தேவையில்லை என தேசிய மக்கள் சக்தி அறிவித்திருந்தது. ஆகவே அடுத்த மாதம் சீன செல்லவுள்ள ஜனாதிபதி அங்கு பேசவுள்ள விடயங்களையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.” – என்றார்.
