ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றிபெறும் பட்சத்தில் நாட்டை ஆளமுடியாமல் தற்கொலை செய்துகொண்ட ஜனாதிபதியாக வரலாற்றில் இடம்பிடிப்பார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஜே.வி.பி.இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றி வருகின்றது என்பது தற்போது உறுதியாகின்றது. அக்கட்சியனரால் போலி கருத்துகளே சமூகத்தில் விதைக்கப்படுகின்றன. எனவே, உண்மையை சொல்லி நாட்டை பொறுப்பேற்குமாறும், பொய்களை நிறுத்துமாறும் நாம் கோருகின்றோம்.
இலங்கை வரலாற்றில் மன்னர்களுக்கு பிறகு, அழுத்தம் காரணமாக நாட்டை ஆள முடியாமல் ஓடிய தலைவர்தான் கோட்டாபய ராஜபக்ச. அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி ஆகமாட்டார் என்பது உறுதி. சிலவேளை கனவிலாவது அவர் ஜனாதிபதியானால் அழுத்தம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட ஜனாதிபதியாக வரலாற்றில் இடம்பிடிப்பார். ஏனெனில் அந்தளவுக்கு பொய்யுரைக்கின்றனர்.
அத்துடன், இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு ஜே.வி.பியின் கொள்கைகளை அநுரகுமார திஸாநாயக்க காட்டிக்கொடுத்துள்ளார்.” – என்றார்.
