தோட்ட குடியிருப்பை கிராமமாக்கும் திட்டத்துக்கு முழு ஆதரவு

தோட்டகுடியிருப்பு பிரதேசங்களை கிராமங்களாக பிரகடனம் செய்யும் ஜனாதிபதியின் யோசனைக்கு பூரண ஆதரவு வழங்கப்படும் என்று மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

“ கடந்த பல வருடங்களாகவே இந்த யோசனையை பல்வேறு மட்டங்களில் நான் தெரிவித்து வந்திருக்கிறேன். நாட்டில் ஆயிரத்துக்கு மேற்பட்ட தோட்டங்களில் பெருந்தோட்ட நிறுவனங்களால் உரிமைக் கொண்டாடப்படும் தோட்ட குடியிருப்பு பிரதேசங்கள் காணப்படுகின்றன.

தோட்ட குடியிருப்புகளில் வசிக்கின்றவர்களுக்கு பெருந்தோட்ட கம்பனிகள் பல்வேறு வகையில் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. பெருந்தோட்ட கம்பனிகள் தோட்ட குடியிருப்பு பிரதேசத்துக்கும் குத்தகை செலுத்தும் காரணத்தை பயன்படுத்தி தோட்டத் தொழிலாளர்கள் உட்பட தோட்ட குடியிருப்புகளில் வசிக்கும் அனைத்து மக்களும் பணயக் கைதிகள் போல் நடத்தப்படுகிறார்கள்.

தோட்ட முகாமையாளர்களுக்கு வேண்டத்தகாதவர்கள் என்று இனம் காணப்படுபவர்கள் அரச காணி சட்டத்தை பயன்படுத்தி தோட்ட குடியிருப்புகளை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

இது சம்பந்தமாக கடந்த காலங்களில் நான் தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தி தகவல்கள் கோரிய போதும் முதலில் அதை தர மறுத்து விட்டார்கள். பின்னர் ஆணைக்குழுவில் முறையீடு செய்ததனால் ஆணைக் குழுவின் உத்தரவுக்கிணங்க ஒரு சில மட்டுப்படுத்தப்பட்ட தகவல்கள் மட்டும் வழங்கப்பட்டன.

அவர்களின் தகவலின் படி தோட்டங்களில் பரம்பரையாக வாழ்ந்திருந்தாலும் அந்த குடும்பத்தை சட்டவிரோத குடியிருப்பாளராக தோட்ட முகாமையாளர் கருதுவாராயின் எவ்வித விசாரணையும் இன்றி தோட்ட குடியிருப்புகளை விட்டு வெளியேறும்படி குறுங்கால அறிவித்தல் விடப்படுகிறது.

இதன்படி குடியிருப்புகளை விட்டு வெளியேறாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் தோட்டங்களை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள். தோட்ட குடியிருப்பு பிரதேசங்களை கிராமமாக மற்றும் திட்டம் தோட்ட முகாமையாளர்களின் அடாவடித்தனத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியாக அமையும்.

அதே நேரத்தில் தோட்ட குடியிருப்பு பிரதேசங்களுக்கு தோட்ட கம்பனிகள் செலுத்துகின்ற குத்தகையிலிருந்து அவர்களை விடுவித்து தேயிலை பயிரிடப்பட்டிருக்கின்ற நிலத்துடனும் அத் தொழிலுடனும் அவர்களின் எல்லை வரையறுக்கப்படும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது எடுத்திருக்கின்ற தீர்மானம் தோட்ட குடியிருப்பாளர்கள் பெருந்தோட்ட கம்பனிகளின் பிடியிலிருந்து விடுபட்டு சுதந்திரமான கிராமங்களில் வாழ்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும்.

அத்துடன் தோட்ட குடியிருப்பு பிரதேசம் என்பது வெறுமனே லயன் குடியிருப்புகளை மட்டுமல்லாமல் அவர்கள் பயன்படுத்தி வருகின்ற விவசாயக் காணிகள், கால்நடை வளர்ப்புக்காக பயன்படுத்திய புற்தரைகள், வழிபாட்டுத் தலங்கள், விளையாட்டு மைதானங்கள் என்பனவும் உள்ளடக்கப்பட வேண்டும்.

அத்துடன் புதிதாக கட்டப்படுகின்ற தனி வீடுகளும் தோட்ட குடியிருப்பு பிரதேசத்துடன் உள்வாங்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் வீட்டு தேவைக்காக கட்டப்படுகின்ற தனி வீடுகளும் கிராமங்களுக்குள் உள்ளடக்கப்பட வேண்டும்.

இவ்வாறு உருவாக்கப்படுகின்ற கிராமங்கள் முழுமையாக தோட்ட நிர்வாகத்தின் கீழ் இருந்து விடுபட்டு உள்ளூராட்சி அமைப்புகளின் ஆளுகைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதி அவர்களின் இந்த முன்மொழிவு தோட்டங்களில் வேலை செய்கின்ற தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது. தோட்டக் குடியிருப்பு பிரதேசங்களை பூர்வீகமாகக் கொண்டு தோட்டத்தில் வேலை செய்யாத சகலருக்கும் வரப்பிரசாதமாக அமையும்.” – எனவும் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles