தோட்டத் தொழிலாளர்களுக்கு போதிய தீபாவளி முற்பணத்தை வழங்குதல், ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை உறுதிசெய்தல், உர தட்டுப்பாட்டுக்குத் தீர்வை பெற்றுக்கொடுத்தல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கட்டுபாடற்ற விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல் உட்பட பல்வேறு விடயங்களை வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சி கலவானை நகரில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தது.
ஐ.தே.கவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தலைமையில் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பொது மக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதன்போது உரையாற்றிய எஸ்.ஆனந்தகுமார், அரசாங்கத்தின் முறைமையற்ற பொருளாதார முகாமைத்துவத்தால் நாடு பாரதூரமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள், எரிவாயு, பெட்றோல் என அனைத்து பொருட்களின் விலைகளும் கட்டுப்பாடற்ற விதத்தில் அதிகரித்து வருகின்றன. இதனால் பெரும் பாதிக்கப்பட்டுள்ள தரப்பாக பெருந்தோட்ட மக்கள் உள்ளனர்.

எதிர்வரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாத நிலையில் பெருந்தோட்ட மக்கள் வாழ்கின்றனர். தோட்டத் தொழிலாளர்களுக்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தீபாவளி முற்பணத்தை வழங்க கம்பனிகள் நடவடிக்கையெடுக்க வேண்டும். இதற்கு அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதேபோன்று ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு எந்தவொரு தோட்டத்திலும் வழங்கப்படுவதில்லை. உரத் தட்டுப்பாடு காரணமாக தேயிலை உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு உரிய தீர்மானத்தை அரசாங்கம் எடுக்க வேண்டும். விரைவாக உரத்தட்டுப்பாட்டுக்கு தீர்வை வழங்க வேண்டும்.
அத்துடன், அத்தியாவசியப் பொருட்களின் விலை வானளவு உயர்ந்துள்ளது. தொடர்ந்து பொருட்களின் விலைகள் அதிகரித்தால் மக்களால் அதன் சுமையை தாங்கிக்கொள்ள முடியாது. கொவிட் நெருக்கடிக்கு மத்தியில் வருமானத்தை இழந்துள்ள மக்களால் எவ்வாறு இந்த நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க முடியும். ஆகவே, அரசாங்கம் தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுக்காது நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று மக்களின் வாழ்வாதார சுமையை குறைக்க வேண்டும்’










