நானுஓயாவில் பாடசாலை மாணவி சடலமாக மீட்பு! பலகோணங்களில் விசாரணை!!

நானுஓயாவில் மர்மமான முறையில் உயிரிழந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியொருவரின் சடலம் ஆற்றிலிருந்து இன்று (29) மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்விபயின்ற –  டெஸ்போட்ச் தோட்டத்தில் கீழ்பிரிவில் வசித்த மகேந்திரன் யசோதா என்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

” மகள் நேற்றிரவு (28) 10.30 மணிவரை கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். நாம் நித்திரைக்கு சென்றுவிட்டோம். பின்னர் அதிகாலை 2.30 மணியளவில் எழுந்துபார்க்கும்போது மகளை காணவில்லை. இதனையடுத்து தேட ஆரம்பித்தோம்.” என யசோதாவின் தாயார் நானுஓயா பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

ஊர் மக்களும் இணைந்து தேட ஆரம்பித்தனர். இந்நிலையில் இன்று (29) காலை தோட்டத்தொழிலாளர்கள் சிலர் கொழுந்து கொய்வதற்கு சென்றுக்கொண்டிருக்கையிலேயே வீட்டுக்கு அருகில் உள்ள ஆற்றில் யசோதா சடலமாக கிடப்பதை கண்டு அறிவித்துள்ளனர்.

மரணபரிசோதனைக்காக சடலம் நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளது. நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Articles

Latest Articles