‘நிவாரணம் கோரி வெளிஓயா பகுதி மக்கள் போராட்டம்’

பயணக்கட்டுப்பாட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஹட்டன், வெளிஓயா பகுதி மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தோட்ட முகாமையாளர் மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பிலும் அதிருப்தி வெளியிட்டனர்.

வெளிஓயா பகுதியில் 6 ஆயிரம் பேர் வாழ்கின்றனர். சுமார் 950 பேர் பெருந்தோட்டத்துறையில் தொழில் புரிகின்றனர்.

இப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும், 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவும் எட்டாக்கனியாகவே உள்ளது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

தோட்ட நுழைவாயிலில் பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். அனுமதி பெற்றவர்கள்கூட வெளியேறமுடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. இப்பகுதியில் உள்ள கூட்டுறவு நிலையங்களிலும் பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. எனவே, விலை குறைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த காலத்தில் நோயாளிகள்கூட வெளியில்செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டினர்.

30 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் நேற்றே இப்பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles