கம்பளை நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவர்கள் நால்வர் பாடசாலைக்குப் பின்னால் உள்ள பற்றைக்காட்டில் மறைந்திருந்து ஒரு போத்தல் சாராயத்தை அருந்திவிட்டு, பீடி புகைத்துக் கொண்டிருந்தபோது கம்பளை பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.
இந்த நான்கு மாணவர்களும் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்ற உள்ளவர்களெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விடுமுறை தினமான கடந்த திங்கட்கிழமை காலை கம்பளை நகருக்கு வந்த இவர்கள், நகரில் உள்ள சாராயக்கடை திறந்தவுடன் ஒரு போத்தல் சாராயத்தை வாங்கியதுடன் கடலை பக்கெட் ஒன்றையும் சில பீடிகளையும் வாங்கியுள்ளனர்.
அவற்றை எடுத்துக்கொண்டு பாடசாலைக்கு பின்னாலுள்ள பற்றைக் காட்டுக்குள் நுழைந்து ஒரு மறைவிடத்தில் அமர்ந்து ஒரு சில நிமிடங்களில் சாராய போத்தலை காலி செய்துள்ளனர்.
பின்னர் பீடி புகைத்துக் கொண்டிருந்தபோது கம்பளை பொலிசார் இவர்களைக் கைது செய்துள்ளனர்.
கம்பளை பொலிசார் இந்த மாணவர்களின் பெற்றோரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து தமது பிள்ளைகள் விடுமுறை தினத்தன்று எங்கே செல்கின்றார்கள் என்பது குறித்து அவதானம் செலுத்தும்படி எச்சரித்த பின்னர் மாணவர்களை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.










